தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து; பொடா ரத்து: கலாம் அறிவிப்புடெல்லி:தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து (classical language)
டெல்லி:
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து (classical language) வழங்கப்படும் என ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று அறிவித்தார். அதே போல பொடா சட்டம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைந்ததையடுத்து நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இன்று கலாம் உரையாற்றினார். அப்போது புதிய அரசின் கொள்கைத் திட்டங்களை கலாம் வெளியிட்டார்.
அப்போது தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்படும் என்ற அறிவிப்பை கலாம் வெளியிட்டார். இதனை தமிழக எம்.பிக்கள் அனைவரும் மேஜைகளைத் தட்டி வரவேற்றனர்.
அகே போல அரசியல் சட்டத்தின் எட்டாவது பிரிவில் உள்ள நாட்டின் அனைத்து தேசிய மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக்குவது குறித்து ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்படும் என்றும் கலாம் அறிவித்தார்.
பொடா ரத்தாகும்:
மேலும் பொடா சட்டம் ரத்து செய்யப்படும் என்றும் அதே நேரத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்தத் தொய்வும் இருக்காது என்றும் கலாம் அறிவித்தார். இருக்கும் சட்டங்களை வைத்தே தீவிரவாதத்தை ஒடுக்க முடியும் என்பதால் பொடா நீக்கப்படும் என்றார்.
இந்த அறிவிப்பை பா.ஜ.க. கூட்டணி மற்றும் அதிமுக தவிர்த்த பிற கட்சிகளின் எம்.பிக்கள் மேஜைகளைத் தட்டி வரவேற்றனர்.
தமிழில் கவிதை படித்த கலாம்:
முன்னதாக தனது உரையைத் தொடங்கிய கலாம், இன்று நான் வழக்கமாக காலை நடைபயணம் செய்த போது இறைவனிடம் வேண்டி கொண்டேன். அது என்ன தெரியுமா? என்று கேட்டுவிட்டு, தமிழில் கவிதையை படிக்கத் தொடங்கினார்.
இலட்சியக் கடலில் நீந்தும் 100 கோடி இந்திய மக்கள் அறிவுப் புதையல் பெறட்டும், இன்ப அமைதி பெறட்டும், இறைவா என வேண்டுவதாகச் சொல்லி உரையை வாசிக்க ஆரம்பித்தார்.












Click it and Unblock the Notifications