தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு எதிராக பாமக போராட்டம்
சென்னை:
தனியார் பொறியியல் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கண்மூடித்தனமான கட்டணத்தை கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பாமகவினர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, நீதிபதி சுப்ரமணி கமிட்டி தனியார் பொறியியல் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத் தேர்வு நடத்திய பின்னர் தனியாக இன்னொரு நுழைவுத் தேர்வு நடத்துவது மாணவர்களிடையே பெரும் குழப்பத்தையும், லஞ்ச லாவண்யத்தையும் வளர்க்கவுமே உதவும்.
இந்தக் குழப்பத்திற்குக் காரணமான அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமியை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஏழை, நடுத்தர மாணவ, மாணவிகள் பொறியியல் கல்லூரிகளில் படிக்கவே முடியாத அளவுக்கு கட்டண வசூல் இருக்கிறது.
கட்டண உயர்வை கட்டுப்படுத்தவும், புதிய கட்டணத்தை நிர்ணயிக்கவும் ராமன் கமிட்டி அனைக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையே தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் இந்தக் கமிட்டி தனது அறிக்கையைத் தரவில்லை. இதனால் அந்தக் கமிட்டியைக் கலைக்க வேண்டும்.
மகாராஷ்டிரத்தில் கட்டணம் கடந்த ஆண்டைவிட பாதி அளவாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு இந்த விஷயத்தில் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை என்றார் மணி.












Click it and Unblock the Notifications