பொறியாளர் கடத்தப்பட்ட வழக்கு: அதிமுக எம்.எல்.ஏவை காக்க முயலும் போலீஸ்
விருதுநகர்:
பொதுப் பணித்துறை உதவிப் பொறியாளரை அதிமுக எம்.எல்.ஏ. ஆள் வைத்துக் கடத்தித் தாக்கிய வழக்கில் 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் சிவக்குமார் என்பவரை, விளாத்திக்குளம் அதிமுக எம்.எல்.ஏ. பெருமாள் உத்தரவின் பேரில் காண்டிராக்டர் நந்தகுமார், எம்.எல்.ஏ.வின் மகன் வரதராஜ பெருமாள் உள்ளிட்டோர் கடத்திச் சென்று தாக்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிவக்குமாரின் மனைவி போலீஸில் புகார் கொடுத்தார். முதல்வருக்கும் புகார் மனு அனுப்பினார். இந் நிலையில் நந்தகுமார், அவரது மைத்துனர் சிவக்குமார் ஆகியோர் மீது மட்டும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இன்று இந்த இருவரையும் அருப்புக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் போவதாக போலீசார் கூறுகின்றனர். எம்.எல்.ஏ. மீதோ, கடத்தலில் நேரடியாக தொடர்புடைய அவரது மகன் மீதோ போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நந்தகுமாருக்கு காண்ட்ராக்ட் தருமாறு எம்.எல்.ஏ. சொன்னதைக் கேட்காமல், நியாயமாக டெண்டர் விட்டு வேறோருவருக்கு காண்ட்ராக்ட் தந்த காரணத்தால் பொறியாளரை எம்.எல்.ஏவின் மகன் கடத்தியதாகக் கூறப்படுகிறது.