ராமதாஸ் மீது ஓ.பி கடும் தாக்கு
சென்னை:
காவிரிப் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உண்மைக்குப் புறம்பான செய்திளை வெளியிட்டு வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியில் தண்ணீர் கிடைக்காததற்கு அதிமுக அரசுதான் காரணம் என்று உண்மைக்குப் புறம்பான புகாரை கூறியுள்ளார் ராமதாஸ்.
கடந்த 2001ம் ஆண்டு அதிமுக அரசு பதவியேற்ற பிறகு செப்டம்பர் 8ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், கல்வி அமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் தலைமையில் குழு ஒன்று செப்டம்பர் 10ம் தேதி டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயை சந்தித்து கோரிக்கை விடுத்தது.
அதேபோல, 2002ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக புறக்கணித்தது, காங்கிரஸ் வெளிநடப்புச் செய்தது. மற்ற கட்சிகள் வந்திருந்த அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துடன் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அனைத்துக் கட்சி குழு டெல்லி சென்று காவிரியில் தண்ணீர் விடக் கோரி கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமரை கேட்டுக் கொண்டது.
அதன் பின்னர் 2002ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 9ம் தேதி பொது வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டங்கள் அனைத்திலும் பாமக கலந்து கொண்டதை ராமதாஸ் மறைக்கப் பார்ப்பதன் காரணம் என்ன என்று புரியவில்லை. சுயநலம், இரட்டை வேடம் போடுவது ராமதாஸுக்கு கைவந்த கலை.
காவிரியில் தண்ணீர் பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு சோனியா காந்திக்கும், கருணாநிதிக்கும் அதிகம் உள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது 6 கோடி தமிழக மக்களின் மனக் கருத்து என்பதை ராமதாஸ் மறந்து விடக் கூடாது.
கப்பல் போக்குவரத்துத்துறையை வாங்க கடுமையாக சண்டை போட்ட திமுகவும், எம்.பி பதவியிலேயே இல்லாத தனது மகன் அன்புமணிக்கு அமைச்சர் பதவி பெற ராமதாஸ் போராடியதையும் தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்.
பதவிகளைப் பெற திமுகவும், பாமகவும் காட்டிய ஆர்வத்தையும், அக்கறையையும் காவியில் நீர் பெற காட்டினால் போதும் என்று கூறியுள்ளார் பன்னீர் செல்வம்.