காவிரியில் தண்ணீர் வராததற்கு ஜெவே காரணம்: ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை:
காவிரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் வராததற்கு முதல்வர் ஜெயலலிதாவின் தவறான நடவடிக்கைகளே காரணம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கச் செல்லும் தமிழக எம்.பிக்கள் குழுவில், அதிமுகவும் இடம் பெறும் என்று கூறிய முதல்வர் அக் குழுவில் இடம் பெற்றுள்ள திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக கட்சிகள் மீது புகார்கள் கூறியுள்ளார்.
பிரச்சினையைத் தீர்க்க வேண்டி பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டு, தமிழகத்திற்குத் தண்ணீர் பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காவிரியில் தண்ணீர் வரவேண்டும் என்ற அக்கறையை விட இந்தப் பிரச்சினையை அரசியலாக்கி, ஆதாயம் தேடும் முயற்சியே ஜெயலலிதாவிடம் உள்ளது. காவிரியில் கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் வராமல் போனதற்கு ஜெயலலிதாவின் கடந்த கால நடவடிக்கைகளே காரணம்.
இத்தகைய மோதல் போக்கைத் தவிர்த்துவிட்டு அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் செயல்பட ஜெயலலிதா முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications