தமிழகத்துக்கு தண்ணீர் விட கர்நாடகம் மறுப்பு
பெங்களூர்:
தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி முதல்வர் தரம்சிங்கின் தலைமையில் அமைந்துள்ள நிலையில், 10 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்று தான் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
இதில் தொழில்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பி.ஜி.ஆர். சிந்தியா நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதாக செய்திகள் வெளியாவது தவறானது. அப்படிப்பட்ட உத்தரவு ஏதும் வரவில்லை.
இப்போது கர்நாடக விவசாயிகளுக்கே போதிய நீர் இல்லை. இந் நிலையில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வாய்ப்பே இல்லை என்றார்.
கர்நாடகத்தின் நீர் வளத்துறை அமைச்சராக மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிருஷ்ணாவின் அரசின் உள்துறை அமைச்சராக இருந்தார்.
இந் நிலையில் முதல்வர் தரம்சிங்கை வரும் 10ம் தேதி திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் குழு சந்தித்து காவிரியில் நீர் திறந்துவிட கோரிக்கை விடுக்கவுள்ளது.