ஜி-8 நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா- சீனா !
வாஷிங்டன்:
வளர்ச்சியடைந்த ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவையும், சீனாவையும் சேர்த்துக் கொள்ள அந்த நாடுகள் முன் வந்துள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், கனடா, ஜப்பான், ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி ஆகியவை அடங்கிய ஜி-8 நாடுகளின் மாநாடு ஜார்ஜியாவில் நேற்று முடிவடைந்தது.
அதில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், இத்தாலியப் பிரதமர் சிலிவியோ பெர்லுஸ்கோனி ஆகியோர் இந்தக் கூட்டமைப்பில் இந்தியாவையும், சீனாவையும் சேர்க்க வேண்டியது மிக அவசியம் என கருத்துத் தெரிவித்தனர்.
இந்தியா, சீனாவை கூட்டமைப்பில் இணைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டதாக டோனி பிளேர் பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய நாடுகளான இந்தியா, சீனா ஆகியவை ஜி-8 நாடுகளில் இருக்க வேண்டியது மிக அவசியம் என விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
வளர்ந்து வரும் பொருளாதார பலத்தை வைத்துப் பார்க்கும்போது இந்த இரு நாடுகளையும் தவிர்த்துவிட்டு உலக பொருளாதார வளர்ச்சி குறித்து கூட்டமைப்பு இனி விவாதம் நடத்துவதே சாத்தியமில்லை என இத்தாலியப் பிரதமர் கூறியுள்ளார்.