கோவையில் தடுப்பணை உடைப்பு: கேரள கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் அட்டகாசம் !
கோவை:
கோவை மாவட்டம் ஆலந்துரை பகுதியில் உள்ள தடுப்பணையை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழு உடைத்து விட்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சிறுவானி வனப் பகுதியின் கீழ் வரும் கல்குத்தி வாய்க்கால் பகுதியில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆட்டு மலையிலிருந்து வரும் தண்ணீரை தேக்கி வைத்து கோவை பாசனப் பகுதிகளுக்கு அனுப்புவதற்கு வசதியாக இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த அணைகள் தமிழக வனப் பகுதிக்குள் உள்ளன.
இந் நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட ஆட்சித் தலைவர் சஞ்சீவ் கெளசிக் தலைமையிலான அதிகாரிகள் குழு, தமிழக வனத்துறையினரின் அனுமதி இல்லாமல், இப்பகுதிக்கு வந்துள்ளனர்.
அங்குள்ள ஒரு தடுப்பணையை உடைத்து தண்ணீரை கேரள மாநிலம் மலம்புழா அணைக்குத் திருப்பி விட்டுள்ளனர்.
கேரள அதிகாரிகளின் இந்த அடாவடிச் செயல் தமிழக அதிகாரிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள அதிகாரிகள் இதுபோல நடந்து கொள்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிரச்சனை தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் கேரள மற்றும் தமிழக அதிகாரிகளிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை கேரள அதிகாரிகள் மதிக்கவில்லை.
ஒரு ஆட்சித் தலைவரே இதுபோல அடாவடிச் செயலில் ஈடுபட்டதால் தமிழக அதிகாரிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications