தண்டனை ரத்து: 1.76 லட்சம் ஊழியர்களுக்கும் அரசு தனித்தனியே கடிதம்
சென்னை:
அரசு ஊழியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது குறித்து 1.76 ஊழியர்களுக்கும் பேருக்கும் தமிழக அரசு தனித்தனியே கடிதங்களை அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 1.76 லட்சம் ஊழியர்களை கூண்டோடு டிஸ்மிஸ் செய்த தமிழக அரசு அவர்களைக் கைது செய்து வழக்குகளையும் தொடுத்தது.
சமீபத்திய தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும், பதவி இறக்கம்- டிரான்ஸ்பர் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஆளான ஊழியர்களுக்கு அந்த தண்டனைகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதையடுத்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்ட அனைத்து தண்டனைகளும் கூண்டோடு ரத்து செய்யப்பட்டன. இந் நிலையில் அந்த ஊழியர்கள் அனைவருக்கும் அந்ததந்த துறைகளின் சார்பில் தனித்தனியாக கடிதங்களை தமிழக அரசு அனுப்ப ஆரம்பித்துள்ளது.
அதில், முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி உங்கள் தண்டனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசின் சிறப்பான செயல்பாட்டுக்கு தொடர்ந்து உங்களின் ஒத்துழைப்பு தேவை என்று கூறப்பட்டுள்ளது.