மிரிண்டாவில் கரப்பான் பூச்சி!: நடிகர் விவேக் மீது வழக்கு!!
சென்னை:
மிரிண்டா குளிர் பானத்தில் கரப்பான் பூச்சி மிதந்ததால், மிரிண்டாவுக்காக விளம்பரப் படத்தில் நடித்த நடிகர் விவேக் உள்ளிட்ட 5 பேர் மீது 2 வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சேதுராமன், கண்ணன் ஆகியோர் ஒரு கடையில் மிரிண்டா குளிர்பானம் வாங்கி அருந்தினர்.
அப்போது ஒரு பாட்டிலில் கரப்பான் பூச்சி கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தனர். கரப்பான் பூச்சியைப் பார்க்காமல், அந்தப் பாட்டிலில் உள்ள குளிர்பானத்தை சிறிது குடித்துவிட்ட கண்ணனுக்கு தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து இரண்டு பாட்டில்களையும் காசு கொடுத்து வாங்கிக் கொண்ட இரு வழக்கறிஞர்களும் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் மிரிண்டா குளிர்பான நிறுவன உயர் அதிகாரி பிரகாஷ் அய்யர், புரசைவாக்கம் பகுதிக்கான வினியோக உரிமை எடுத்துள்ள கலைமணி, விஜயக்குமார், மிரிண்டா விளம்பரத்தில் நடித்து அதை மக்களிடம் பிரபலப்படுத்திய நடிகர் விவேக் ஆகியோரை குற்றவாளிகளாக புகாரில் சேர்த்துள்ளனர்.
இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications