தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் தரலாம்: மத்திய குழு
டெல்லி:
தமிழகத்திற்கு நல்லெண்ண அடிப்படையில் கர்நாடகம் தண்ணீர் தரலாம் என்று மத்திய நிபுணர் குழு கூறியுள்ளது.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு சந்தித்துப் பேசியது. இதைத் தொடர்ந்து 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை மன்மோகன் சிங் நியமித்தார். இந்தக் குழு கர்நாடகத்தில் உள்ள அணைகள் மற்றும் தமிழகத்தின் மேட்டூர் அணை ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தது.
இதைத் தொடர்ந்து தனது அறிக்கையை இக்குழு பிரதமரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில், தமிழகத்திற்கு நல்லெண்ண அடிப்படையில் தண்ணீர் விடலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
மேட்டூரை விட கர்நாடக அணைகளில் அதிக நீர் இருப்பதாக நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நடுவர் மன்ற இடைக்கால உத்தரவுப்படி கர்நாடகம் உரிய நீரை விடுவித்திருந்தாலும் கூட அது தேவையில்லாத காலத்தில் திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே தற்போது தமிழகத்தின் நிலையைக் கணக்கில் கொண்டு மனிதாபிமான, நல்லெண்ண அடிப்படையில், கர்நாடகம் தண்ணீர் திறந்து விடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அறிக்கை குறித்து விரைவில் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பிறகு தேவைப்பட்டால் காவிரி நீர் ஆணையக்கூட்டம் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.