இடமாறுதலுக்கு அமைச்சர் லஞ்சம் கேட்கிறார்: வனத்துறை ஊழியர்கள் பகிரங்க புகார்
கோவை:
இடமாற்றம், பதவி உயர்வுக்கு லட்சக் கணக்கில் லஞ்சம் கேட்பதாக வனத்துறை அமைச்சர் வைத்தியலிங்கத்தின் மீது அந்தத் துறையின் ஊழியர்கள் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு வனத்துறை அலுவலர்கள் சங்கத்தின் கூட்டத்தில் இதனை வெளிப்படையாகவே தெரிவித்த ஊழியர்களும் சங்க நிர்வாகிகளும், பின்னர் அமைச்சரைக் கண்டித்து தீர்மானங்களையும் நிறைவேற்றினர்.
அந்த தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதாவது:
வனத்துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த பணியிடங்களுக்கு இடமாற்றம் செய்ய ஊழியர்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்கப்படுகிறது.
வனத்துறை அமைச்சர், தலைமையிட வனத்துறை அதிகாரியின் மூத்த உதவியாளர் ஆகியோர் தயாரிக்கும் பட்டிலின் அடிப்படையில் தான் இடமாற்றங்கள் செய்யப்படுகின்றனர்.
பெரும் தொகையை லஞ்சமாகக் கொடுப்பவர்களுக்கு முக்கியமான இடங்களில் பணி தரப்படுகிறது. இந்த விஷயத்தில் பணத்தைப் பெற்றுக் கொண்டு அமைச்சரே முதன்மை வனப் பாதுகாவலருக்கு உத்தரவுகள் இடுகிறார்.
வைத்திலிங்கம் அமைச்சரான பின்னர் வனத்துறையில் எந்த முன்னேற்றமும் இல்லை. பணம் சம்பாதிக்க மட்டுமே அமைச்சராக இருக்கும் வைத்திலிங்கம் இனியும் நீடித்தால் தமிழகத்தில் வனத்துறையே ஒழிந்து போகும்.
இதனால் அவரை முதல்வர் ஜெயலலிதா உடனடியாக மாற்ற வேண்டும். இதில் தாமதம் காட்டினால் ஜனாதிபதிக்கும் கவர்னருக்கும் ஆயிரக்கணக்கான தந்திகள் மூலம் இந்த விஷயத்தைக் கொண்டு போவோம்.
இவ்வாறு தீர்மானத்தில் ஊழியர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications