தமிழ் விரைவில் ஆட்சி மொழியாக வேண்டும்: கருணாநிதி
சென்னை:
சிங்கப்பூர், இலங்கை போல இந்தியாவிலும் தமிழ் விரைவில் ஆட்சி மொழியாக வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி விருப்பம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த மறைந்த தமிழறிஞர் தமிழ்வேள் சாரங்கபாணியின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா சென்னையில் நடந்தது. திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கருணாநிதி சிறப்புரையாற்றினார்.
கருணாநிதி பேசுகையில்,
தமிழை செம்மொழியாக மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட்டுவிட வேண்டும் என்றும் விரும்புகிறேன். உலகம் முழுவதும் எல்லா முக்கிய பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.
அதன் பின்னர் உடனடியாக தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். அந்த நல்ல செய்தியை இந்த ஆண்டே நான் கேட்க விளைகிறேன். இலங்கை, சிங்கப்பூர் போன்ற பல்வேறு உலக நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது. அதுபோல இந்தியாவிலும் தமிழ் உடனடியாக ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும்.
அரசியல் சட்டத்தின் 8-வது பிரிவில் உள்ள அனைத்து மொழிகளையும் இந்தியாவின் ஆளும் மொழியாக அறிவிப்பது குறித்து முடிவெடுக்க குழுவை அமைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. குழுக்கள், கமிட்டிகள் மீது எனக்கு எப்போதுமே சந்தேகம் உண்டு.
ஒரு விஷயத்தை செய்ய முடியாவிட்டால் கமிட்டியைப் போடு அல்லது கல்லைப் போடு என்று கல்கி சொல்வார். அது மாதிரி கல்லைப் போடும் செயலாகிவிடக் கூடாது. இந்த ஆண்டுக்குள்ளாகவே தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் என்பதே அனைவரின் ஆசை.
தமிழை செம்மொழியாக மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட்டுவிட வேண்டும் என்றும் விரும்புகிறேன். உலகம் முழுவதும் எல்லா முக்கிய பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.
இத்தனை நாட்களாக தமிழ் அடிமைப்பட்டுக் கிடந்தது. அதை விடுவிக்கும் பொறுப்பை திமுகவும், திகவும் ஏற்றுக் கொண்டுள்ளன. இரு இயக்கங்களும் இந்த நோக்கத்திற்காக இணைந்து பாடுபடும் என்றார்.
நானும் வீரமணியும் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் காரணமாக இருக்கும் மறைந்த தமிழ்வேள் சாரங்கபாணியின் நினைவுகளுக்கு என் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.
காலச் சக்கரத்தில் நான் ஒரு ஒட்டகத்தில் பயணம் செய்தேன் (பா.ஜ.க.). வீரமணி ஒரு கொக்கின் (அதிமுக) மேல் பயணம் செய்தார். ஒட்டகத்தின் முதுகில் கூண் இருந்தது. அதை நிமிர்த்த முயற்சித்தேன். முடியாமல் போனதால் இறங்கிவிட்டேன். கொக்கின் கழுத்தை நிமிர்த்தப் பார்த்த வீரமணியும் முடியாமல் இறங்கி வந்துவிட்டார்.
மக்கள் பிரச்சனைகளுக்காக, திராவிட உணர்வு, தமிழ் உணர்வை வளர்க்க, அந்த உணர்வு வெற்றி பெற நாம் திராவிடர்கள் என்ற உணர்வோடு அனைவரும் ஒன்றாக வேண்டும். திராவிடர் கழகமும் திமுகவும் தாய்-மகன் போல் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றார் கருணாநிதி.