பிதாமகன், காக்க.. காக்க, பாலா, விக்ரம், லைலாவுக்கு விருதுகள்
சென்னை:
தமிழில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது விக்ரமுக்கும், சிறந்த நடிகைக்கான விருது லைலாவுக்கும், சிறந்த இயக்குனருக்கான விருது பாலாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பிதாமகன் படத்துக்காக இந்த மூன்று விருதுகளும் வழங்கப்பட்டன.
பிலிம்பேர் சினிமா இதழ் ஆண்டுதோறும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்திப் படங்களில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கி கெளரவிக்கிறது. இதன் 51வது விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.
தமிழில் சிறந்த நடிகருக்கான விருது விக்ரக்கும், நடிகைக்கான விருது லைலாவுக்கும், இயக்குனருக்கான விருது பாலாவுக்கும் கிடைத்தது. பிதாமகன் படத்திற்காக இந்த விருதுகள் 3 பேருக்கும் கிடைத்தன.
சாமி படத்தில் காமெடியில் கலக்கிய விவேக்குக்கு சிறந்த சிரிப்பு நடிகர் விருது கிடைத்தது. சிறந்த வில்லன் விருது ஜீவனுக்கு (காக்க காக்க) வழங்கப்பட்டது.
சிறந்த நடன அமைப்பாளராக பிருந்தா (காக்க காக்க), சிறந்த ஒளிப்பதிவாளராக ராஜசேகர் (காக்க காக்க) ஆகியோர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இசைஞானி இளையராஜா மனசினக்கரே (மலையாளம்) படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார்.
பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
விருதை நடிகர் கமல்ஹாசன் வழங்கினார். இன்னொரு சாதனையாளர் விருது நடிகை விஜயசாந்திக்குக் கிடைத்தது.
விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திரையுலகங்களைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கமல்ஹாசனை விட்டுப் பிரிந்து சரிகாவுடன் சேர்ந்து வாழும் அவரது மூத்த மகள் ஸ்ருதி விழாவுக்கு வந்திருந்தார்.