கல்வி கொள்ளையை எதிர்த்து பாமக போராட்டம்
திருநெல்வேலி:
தமிழகத்தில் நடந்து வரும் திட்டமிட்ட கல்வி கொள்ளையைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உயர் கல்வி கற்க விரும்பும் ஏழை மாணவர்களுக்கு அது கிடைக்கவே கிடைக்காது என்ற நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது. கல்வி திட்டமிட்டு வியாபாரம் செய்யப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிக் கட்டணங்களை மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் வெகுவாகக் குறைத்துள்ளன. ஆனால் தமிழகத்தில் ராமன் கமிட்டி கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது.
கட்டண நிர்ணயம் மற்றும் நுழைவுத் தேர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட ராமன் கமிட்டி மற்றும் சுப்ரமணியன் கமிட்டி ஆகிய இரண்டு கமிட்டிகளின் செயல்பாடுகளும் சந்தேகத்திற்கிடமாக உள்ளன. எனவே இவை இரண்டையும் கலைத்து விட வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளன. இதற்குப் பொறுப்பேற்று பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி தனது பதவியை விட்டு விலக வேண்டும். அவர்தான் அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம்.
தமிழகத்தில் திட்டமிட்டு நடந்து வரும் கல்விக் கொள்ளையைத் தடுக்கும் வகையில், சட்டசபைக் கூட்டம் தொடங்கும் நாளில், கோட்டை நோக்கி பாமகவினர் ஊர்வலம் நடத்துவர். இதைத் தொடர்ந்து தொடர் மறியல் போராட்டம் மாநிலம் முழுவதும் நடத்தப்படும்.
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பாமக சார்பில் மனு கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வருக்கு நான் கடிதம் எழுதவுள்ளேன் என்றார் ராமதாஸ்.
பேட்டியின்போது மத்திய அமைச்சர்கள் அன்புமணி ராமதாஸ், ஆர்.வேலு ஆகியோரும் உடன் இருந்தனர்.