பேரூராட்சிகள் கலைப்பு: அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
பேரூராட்சிகளை ஊராட்சிகளாக தரம் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் கூறியுள்ளபடி 3 அடுக்கு உள்ளாட்சி நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்காக 566 நகர பஞ்சாயத்துக்களை கிராமப் பஞ்சாயத்துக்களாக தமிழக அரசு தரம் குறைத்துள்ளது. 43 நகர பஞ்சாயத்துக்கள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்குக் தடை கோரி 8 பேரூராட்சிகளின் தலைவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
தங்களது மனுவில், தமிழக அரசின் நடவடிக்கையால் பேரூராட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பஞ்சாயத்துக்களின் செயல்பாட்டை இது பாதிக்கும். மேலும் இதில் பணியாற்றும் ஊழியர்கள் வேலையிழக்கும் நிலையும் உருவாகும்.
எனவே தமிழக அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனு இன்று நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன் ஆஜராகி வாதாடினார்.
பொது மக்கள் நலன் கருதியே இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதனால் பேரூராட்சித் தலைவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அவர்களது பதவிக்காலம் முடியும் வரை அவர்கள் பதவியில் நீடிக்கலாம். இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க கால அவகாசம் தேவை என்றார்.
இதையடுத்து இன்னும் ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்












Click it and Unblock the Notifications