75,000 நெசவாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்: ஜெ. அடுத்த அதிரடி
சென்னை:
75,000 நெசவுத் தொழிலாளர்களுக்குப் பலனளிக்கும் வகையில் புதிய காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்குப் பின் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து அறிவித்து வரும் சலுகைகளின் வரிசையில் புதிதாகச் சேர்ந்துள்ள சலுகை இது. இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
தமிழகத்தில் கைத்தறித் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் நலனின் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத் திட்டஙகளை அமல்படுத்தி வருகிறது எனது அரசு.
கூட்டுறவு அமைப்புகளில் உள்ள நெசவாளர்கள் பயன் அடையும் வகையில் சுய காப்பீட்டுத் திட்டத்தை அரசு ஏற்கனவே அமலாக்கியுள்ளது. இவர்கள் 60 வயதை அடையும் முன் இறக்க நேரிட்டால் ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில், எல்.ஐ.சியுடன் இணைந்து புங்கர் பீமா யோஜனா என்ற புதிய காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அமலாக்க உள்ளது. இதன்மூலம் காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் நெசவாளர்களுக்கு மேலும் பல சலுகைகள் கிடைக்கும்.
இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெசவாளர்கள் ஒவ்வொருவருக்கும் மத்திய அரசின் பங்காக ரூ. 150ம், எல்.ஐ.சியின் பங்காக ரூ. 100ம், நெசவாளர்களின் பங்காக ரூ. 130ம் பிரீமியம் தொகை (மொத்தம் ரூ. 380) செலுத்தப்பட வேண்டும்.
நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையான ரூ. 130யை இனி தமிழக அரசே செலுத்திவிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் தமிழக அரசின் சேமிப்பு-பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள 75,565 கைத்தறி நெசவாளர்கள் ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய மொத்த பிரீமியமான ரூ. 98.23 லட்சத்தை தமிழக அரசே செலுத்திவிடும்.
பிரீமியம் தொகையை அரசே செலுத்திவிடுவதால், நெசவாளர்கள் தங்கள் பங்கு எதையும் செலுத்தாமலேயே இன்சூரன் திட்டத்தால் பலன் பெற முடியும்.
இத் திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு முன் நெசவாளர்கள் இயற்கையாக இறந்தால் அவர்களது குடும்பத்துக்கு ரூ. 50,000 வழங்கப்படும். விபத்தில் இறந்தால் ரூ. 80,000மும், விபத்தில் படுகாயமடைந்தால் ரூ. 50,000மும், லேசான காயமடைந்தால் ரூ. 25,000மும் வழங்கப்படும்.
கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளித்து, துயர் துடைக்கும் இந்தத் திட்டம் இந்த நிதியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு ஜெயலலிதாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications