கர்நாடகத்தில் கன மழை: கபிணி நிரம்புகிறது
பெங்களூர் - சென்னை:
கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 முக்கிய அணைகளின் நீர் பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கபிணி அணைக்கு நீர் வரத்து பெருமளவில் அதிகரித்துள்ளதால் அந்த அணை நிரையத் தொடங்கியுள்ளது.
கர்நாடகத்திலும்,கேரளாவிலும் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இரு மாநிலங்களிலும் கன மழை பெய்து வருகிறது. கர்நாடகத்தில் கபிணி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய நான்கு காவிரி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
இதில் கபிணி அணைக்கு கேரளாவிலிருந்தும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அந்த அணை இன்னும் சில நாட்களில் நிறைந்து விடும் என்று கர்நாடக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேபோல, மற்ற 3 முக்கிய அணைகளிலும் நீர்வரத்து அதிகம் இருப்பதால் அவையும் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் கர்நாடகத்தின் ஹாசன், கூர்க் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும்.
அணைகள் நிரம்பும் பட்சத்தில் கர்நாடக அரசே விரும்பாவிட்டாலும் நீர் தமிழகத்துக்கு வந்து தான் ஆகும்.
இதற்கிடையே, மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. அணையில் தற்போது 39 அடி நீர் இருப்பு உள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு விநாடிக்கு சுமார் 4,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications