ஓ.பி, பொன்னையன் நாளை பெங்களூர் விரைவு
சென்னை:
பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான உயர் மட்டக் குழு நாளை பெங்களூர் சென்று கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்தித்து காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளது.
கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தையே நடத்த மாட்டோம் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வர் ஜெயலலிதா தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் முதன்முறையாக கர்நாடகத்துக்கு குழுவை அனுப்புகிறார் ஜெயலலிதா.
காவிரி பாசனப் பகுதி விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு போதிய நீர் மேட்டூர் அணையில் இல்லை. இதனால் அணை தொடர்ந்து 4-வது ஆண்டாக இந்த முறையும் திறக்கப்படவில்லை.
இந் நிலையில், தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு டெல்லியில் பிரதமரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தது. அதேபோல், ஜனநாயக முன்னேற்றக் கூட்டணி பிரதிநிதிகள் கர்நாடக முதல்வர் தரம்சிங்கை பெங்களூரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தார்கள்.
இருப்பினும் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று தரம்சிங் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் தமிழகத்துக்கு ஜூன் மாதத்தில் தண்ணீர் விடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.
இதைடுத்து தமிழக அரசு உயர் மட்டக் குழுவை கர்நாடகத்திற்கு அனுப்பி வைக்கிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான இந்தக் குழு புதன்கிழமை பெங்களூர் சென்று தரம்சிங்கை சந்திக்கிறது.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
உயர் மட்டக் குழுவில் நிதியமைச்சர் சி.பொன்னையன், சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் (இவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர், இவரது கணவர் கர்நாடக தலைமைச் செயலாளராக இருந்தவர்) பொதுப் பணித்துறைச் செயலாளர் பழனியப்பன், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் மோகன கிருஷ்ணன் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று ஜெயலதா கூறியுள்ளார்.
இந்தக் குழுவினரை சந்திக்க தரம்சிங் நேரம் ஒதுக்கித் தந்துள்ளார்.












Click it and Unblock the Notifications