உடனே தண்ணீர் திறந்து விடுங்கள்: ஜெ
பெங்களூர்:
தமிழக டெல்டா பகுதி விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியை மேற்கொள்ள வசதியாக உடனடியாகக் காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக முதல்வர் தரம்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று தரம்சிங்கிடம் வழங்கினார். அக் கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டாவது குறுவை நெல் சாகுபடி செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் டெல்டா பகுதி விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டுள்ளனர். அவர்களது துயரமான நிலையை கருத்தில் கொண்டு உடனே நீரைத் திறந்துவிட கர்நாடகம் முன் வர வேண்டும்.
வழக்கமாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக திறந்துவிடப்படும். ஆனால், இந்த ஆண்டு தண்ணீரைத் திறக்க முடியாத அளவுக்கு வெறும் 6 அடி தண்ணீர் தான் உள்ளது.
தொடர்ந்து சில ஆண்டுகளாக கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக காவிரிப் பாசன விவசாயிகளுக்கு இப்போது மேட்டூரில் உள்ள நீரை வைத்து எந்த உதவியும் செய்ய முடியாது.
இந்த ஆண்டு காவிரி நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், எப்படியில் கர்நாடகம் நீர் திறந்துவிடப்படும் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் காத்துக் கொண்டுள்ளனர்.
இதனால் உடனே தண்ணீர் திறந்துவிட ஆவன செய்யுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதாவின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளாக காவிரி விஷயத்தில் கர்நாடகத்துடன் அதிமுக அரசு எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத் தீர்ப்பின் மூலமே தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும் என்று அறிவித்த முதல்வர் ஜெயலலிதா வழக்குகளைத் தொடர்ந்தார்.
ஆனால், நீதிமன்ற உத்தரவுகளைக் கூட கர்நாடகம் மதிக்கவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் மீண்டும் தனது அமைச்சர்களை ஜெயலலிதா அனுப்பி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications