தரம்சிங்குடன் பன்னீர், பொன்னையன் சந்திப்பு
பெங்களூர்:
காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக முதல்வர் தரம்சிங்கை தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான உயர் மட்டக் குழு நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தது.
இன்று பெங்களூரில் விதான செளதாவில் இந்தக் குழு தரம்சிங்கை சந்திதது. இக் குழுவில் நிதியமைச்சர் பொன்னையன், நலத்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
குறுவை சாகுபடிக்குத் தேவையான நீரை உடனே திறந்துவிடுமாறு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தை அப்போது தரம்சிங்கிடம் பன்னீர்செல்வம் வழங்கினார்.
நீர் திறந்துவிடக் கோரி கடந்த ஒர் வாரத்தில் கர்நாடக முதல்வரை சந்திக்க தமிழகத்தில் இருந்து வந்த இரண்டாவது குழுவாகும் இது. முதலில் திமுகவின் துரைமுருகன் தலைமையில் அதிமுக-பா.ஜ.க. தவிர்த்த அனைத்துக் கட்சிக் குழு கர்நாடகம் வந்து சென்றது.
இன்றைய சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், சந்திப்பு மிகவும் சுமூகமான சூழலில் நடந்தது. எங்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக கர்நாடக அரசு உறுதியளித்தது என்றார்.
ஆனால், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே இதனை மறுத்தார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், இப்போதைக்கு தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வாய்ப்பே இல்லை. எங்களது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications