ஒரே பிரசவத்தில் 4 டெஸ்ட் ட்யூப் குழந்தைகள்
சென்னை:
சென்னையில் ஒரு பெண்ணுக்கு சோதனைக் குழாய் முறை மூலம் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன.
சோதனைக் குழாய் மூலம் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது நாட்டிலேயே இதுவே முதல்முறையாகும்.
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜேக்கப்-ஷெர்லி தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. இதனால் அப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகினர்.
இதைத் தொடர்ந்து சோதனைக் குழாய் மூலம் ஷெர்லியை கருத்தரிக்க வைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஜேக்கப்பின் உயிரணுவும் ஷெர்லின் முட்டையும் எடுக்கப்பட்டு, சோதனைக் குழாயில் கருவுறச் செய்யப்பட்டன.
பின்னர் அந்தக் கரு ஷெர்லியின் கருப்பையில் செலுத்தப்பட்டது. மொத்தம் 4 கரு முட்டைகள் ஷெர்லியின் கருப்பையில் வைக்கப்பட்டன.
சோதனைக் குழாய் முறைப்படி வழக்கமாக 3 அல்லது நான்கு கரு முட்டைகள் கர்ப்பப் பையில் வைத்தாலும் ஒன்று அல்லது 2 கருக்களை மட்டுமே வளரும்.
ஆனால் ஷெர்லியின் கருப்பையில் செலுத்தப்பட்ட 4 கரு முட்டைகளையும் நன்றாக வளர்ந்தன. இதையடுத்து நான்கையும் மருத்துவர்கள் முறையாக வளர விட்டனர்.
இதையடுத்து ஷெர்லிக்கு கடந்த 5ம் தேதி நான்கு அழகான குழந்தைகள் பிறந்தன. 8 மாதத்திலேயே சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்துள்ளதால், 4 குழந்தைகளும் இன்குபேட்டரில் கருவியில் வைக்கப்பட்டுள்ளன.
தாயும், குழந்தைகளும் முழு உலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.