வெள்ளம்: அணையை காக்க கபிணி திறப்பு
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் ஹாசன் மற்றும் குடகு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கபிணி அணை வேகமாய் நிரம்பி வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பைக் கருதி கபினியில் இருந்து தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட்டுள்ள கர்நாடகம்.
கர்நாடகத்தில் தென் மேற்குப் பருவ மழை வலுத்து வருகிறது. இதனால் காவிரிப் பாசனப் பகுதிகளுக்கு நீர் வழங்கும் கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹேரங்கி மற்றும் கபிணி ஆகிய அணைகளுக்கு மொத்தமாக விநாடிக்கு 17,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
கபிணி அணைக்கு மட்டும் வினாடிக்கு 21,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் நேற்று ஒரே நாளில் 4 அடி நீர் மட்டம் உயர்ந்ததால் கபிணி அணை நிரம்பி வழிகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளவு 2,284 அடி. இப்போது நீர் மட்டம் 2,276.40 அடியைத் தாண்டிவிட்டது.
2,280 அடிக்கு மேல் இதில் நீரைத் தேக்க முடியாது. இதையடுத்து அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நேற்றிரவு முதல் கபினியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வினாடிக்கு 5,000 கன அடி நீர் கபிலா ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
கபிலா ஆறு கேரளத்தின் வயநாடு பகுதியில் உற்பத்தியாக டி.நர்சிபூர் என்ற இடத்தில் காவிரியுடன் இணைகிறது. இப்போது திறந்துவிடப்படும் நீர் காவிரியில் போய்ச் சேர்ந்து தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து சேரும்.
இந்த நீர் கொள்ளேகால் வழியாக மோட்டூரை வந்தடைய 3 நாட்களாகும்.
அதே போல மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இன்று ஒரே நாளில் நீர் மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளவு 124.80 அடி. இப்போது அணையில் 94.72 அடி நீர் உள்ளது.
நீர் மட்டம் இவ்வளவு இருந்தாலும், தனது அணைகள் வறண்டு கிடப்பதாகவும், போதிய நீர் இல்லை என்றும் கர்நாடகம் கூறி வந்ததும் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.