தமிழகத்துக்கு நீர் விட பிரதமர் உத்தரவு?
டெல்லி:
காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக முதல்வர் தரம்சிங்கிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அமைச்சரைவின் அரசியல் விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தை மன்மோகன் சிங் இன்று கூட்டினார்.
பிரதமரின் அலுவலகத்தில் மன்மோகன் சிங் தலைமையில் மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், நிதியமைச்சர் ப.சிதம்பரம், ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் கொண்ட குழு கூடி விவாதித்தது.
45 நிமிடங்கள் நடந்த இக் கூட்டத்தில் தமிழக, கர்நாடக அணைகளைப் பார்வையிட்ட மத்திய நிபுணர் குழு வழங்கியுள்ள அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
கர்நாடக அணைகளில் நீர் இருப்பதாலும், பருவ மழை பெய்து வருவதாலும் தமிழகத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் உடனே தண்ணீர் திறந்துவிடலாம் என்று அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்துக்கு நீர் கிடைக்கச் செய்யுமாறு பிரதமருக்கு திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதமும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து நீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துடன் பிரதமர் பேசுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டம் முடிந்தவுடன், கர்நாடக முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பிரதமர். அப்போது தமிழகத்துக்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கோரியதாகத் தெரிகிறது.
நேற்றும் தரம்சிங்கிடம் மன்மோகன் சிங் தொலைபேசியில் இதே கோரிக்கையை முன் வைத்ததும் அதை தரம்சிங் நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications