மண்ணுக்குள் தவம்: சாமியாரை காத்த போலீஸ்
கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே குழிக்குள் இறங்கி தவம் இருக்க முயன்ற சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
சமீபத்தில், மதுரை அருகே வாடிப்பட்டியில் குழிக்குள் 48 மணி நேரம் தவம் இருந்த சாமியார் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் வடலூர் அருகே உள்ள ஆபத்தானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாமியார் 12 மணி நேரம் குழிக்குள் தவம் இருக்கப் போவதாக அறிவித்தார். இதனால் வடலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தக் கிராமத்தில் நாக கன்னிகை கோவிலை வெங்கடாசலபதி என்ற சாமியார் நிறுவியுள்ளார். இக் கோவிலுக்கு இன்று மாலை குடமுழுக்கு நடத்தவும் திட்டமிட்டிருந்தார். இதற்கு முன்பாக நேற்று மாலை கோவிலுக்கு அருகே வெட்டப்பட்ட குழிக்குள் இறங்கி 12 மணி நேரம் தவம் இருக்க சாமியார் திட்டமிட்டிருந்தார்.
குழிக்குள் தான் இறங்கிய பின்னர் காற்றுக் கூட புக முடியாத அளவுக்கு குழியை மண் போட்டு மூடி விட வேண்டும் என்று அவர் தனது சிஷ்யர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இத் தகவல் அறிந்ததும் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர்.
வாடிப்பட்டி சாமியாரின் கதி வடலூர் சாமியாருக்கு ஏற்படாமல் தடுக்க அவரைக் கைது செய்தனர்.
பின்னர் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்ட சாமியார், தான் குழிக்குள் இறங்க மாட்டேன் என உறுதிமொழி கொடுத்த பின் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications