அமாவாசை பீதி: வெறிச்சோடிய கிராமம்!
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பூவலம்பேடு கிராமத்தில், அமாவாசை தினத்தன்று (இன்று) ஒரு குழந்தையும், தாயும் மரணமடைவார்கள் என்று வதந்தி கிளப்பப்பட்டதால் ஊரில் உள்ள அத்தனை பேரும் கிராமத்தைக் காலி செய்து விட்டுச் சென்று விட்டனர். இதனால் ஊரே வெறிச்சோடிக் கிடக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது பூவலம்பேடு கிராமம். சுமார் 2,000 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில் கடந்த 6 மாதத்தில் 16 பேர் பல்வேறு நோய்கள் தாக்கி பலியாகியுள்ளனர்.
இந் நிலையில் அந்த ஊரில் அருள் வாக்கு சொல்லும் பெண்மணி, ஊரில் கடவுள் குற்றம் நிகழ்ந்துவிட்டதாகவும், வரும் அமாவாசை (அதாவது இன்று) தினத்தன்று கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையும், அதன் தாயும் மரணமடைவார்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் கிராமமே பெரும் பீதியடைந்துவிட்டது. இதையடுத்து மக்கள் அனைவரும் தங்களது வீடுகளைப் பூட்டி விட்டு பிற ஊர்களில் உள்ள தங்களது உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த அருள் வாக்கை நம்பாத 3, 4 பேர் மட்டுமே கிராமத்தை சுற்றி வந்தவண்ணம் உள்ளனர். இவர்கள் டீ குடிக்கக் கடை இல்லை. டீக் கடைகளையும் பூட்டிவிட்டுச் சென்றனர்.
மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வராததால், கிராமத்தில் உள்ள பள்ளிக் கூடமும் இன்று மூடப்பட்டுவிட்டது. கிராமமே வெறிச்சோடிக் காணப்படுகிறது.
அமாவாசை முடிந்த பின்னர் நாளைதான் மக்கள் கிராமத்திற்கு திரும்புவார்கள் என்று தெரிகிறது












Click it and Unblock the Notifications