கிரிக்கெட் அணி பயிற்சி சென்னைக்கு மாற்றம்
சென்னை:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் பயிற்சி முகாம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த மாதம் 16ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
இதில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் உடல்தகுதி பயிற்சி முகாம் பெங்களூரில் கடந்த 13ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் பயிற்சி முகாம் நாளை முடிவடைகிறது.
இதனையடுத்து இறுதி கட்ட பயிற்சி முகாம் பெங்களூரில் அடுத்த மாதம் 3ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்தப் பயற்சி முகாம் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா கூறுகையில்,
இலங்கையை ஒத்த தட்ப வெப்பநிலை சென்னையில் நிலவும் என்பதால் பயிற்சி முகாம் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜூலை 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை இந்த பயிற்சி முகாமின் போது இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்றார்.
இதற்கிடையே ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை இ.எஸ்.பி.என். தொலைக்காட்சி பெற்றுள்ளது.