சுற்றுச்சூழல்: விரைவில் முதல்வர்கள் மாநாடு- ராஜா
சென்னை:
ரூ. 50 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படும் கட்டடங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற உத்தரவு குறித்து ஆலோசிக்க அனைத்து மாநில முதல்வர்களின் மாநாடு கூட்டப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.
ராணி மேரிக் கல்லூரியை இடித்துவிட்டும், பின்னர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும் தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு முயன்றபோது அதைத் தடுக்கும் வகையில் அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர். பாலு இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
மேலும் கடலோரங்களில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மாறுதல்கள் செய்யவோ, ரூ. 50 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படும் கட்டடங்களைக் கட்டவும், 1,000 பேருக்கு மேல் பணியாற்றும் வகையிலான கட்டடங்கள் கட்டும்போதும் மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதன்மூலம் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகம் பணிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.
இந் நிலையில் இன்று சென்னையில் நிருபர்களிடம் பேசிய ராஜா,
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தான் பாலு அந்த உத்தரவைப் பிறப்பித்தார். ஆனாலும், இதில் முதல்வர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதனால் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க முதல்வர்களின் கூட்டத்தை விரைவில் கூட்ட உள்ளோம்.
பெருமளவிலான கழிவுகளை வெளியேற்றும் மாபெரும் கட்டுமானத் திட்டங்களை நிறைவேற்றும்போது மத்திய அரசின் அனுமதியைப் பெறச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? சுற்றுச்சூழலை மனதில் வைத்துத் தான் இதைச் சொல்கிறோம்.
ஆனால், மத்திய அரசின் உத்தரவு கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக இருப்பதாக பல மாநில முதல்வர்களும் கூறியுள்ளனர். இதனால், அவர்களுடன் பேசி ஒருமித்த கருத்து எட்டப்படும்.
கடலோரங்களின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைகளைத் தர பிரபல விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் குழுவை அமைத்துள்ளோம்.
சேது சமுத்திரத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏதாவது கேடு நேருமா என்பதையும் பார்த்துவிட்டு விரைவில் அனுமதி தரப்படும்.
சென்னையின் கூவம் உள்பட நாடு முழுவதும் உள்ளநதிகளைச் சுத்தப்படுத்த ரூ. 4,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் ராஜா.
முன்னதாக கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கை ராஜா துவக்கி வைத்தார்