நாசாவின் பாராட்டு பெற்ற திண்டுக்கல் மாணவி
திண்டுக்கல்:
செவ்வாய் கிரகக் கல் குறித்து விளக்கம் கேட்டு அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசாவுக்குக் கடிதம் எழுதிய திண்டுக்கல் மாணவியை நாசா அதிகாரிகள் பாராட்டி அவருக்கு பதில் அனுப்பியுள்ளனர்.
திண்டுக்கல் புனித வளனார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருபவர் ஐஸ்வர்யா. இவர் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கு ஒரு கல்லைக் கண்டார்.
மிகவும் வித்தியாசமாக இருந்ததால், அந்தக் கல் குறித்து தனது பெற்றோர், ஆசிரியர்களிடம் கேட்டார். ஆனால் யாருக்குமே அதுகுறித்துத் தெரியவில்லை.
அந்தக் கல் செவ்வாய்க்கிரக கல்லாக இருக்கலாம் என ஒரு ஆசிரியர் சந்தேகம் எழுப்பினார். இதையடுத்து அந்தக் கல் குறித்தும், அதன் தன்மை குறித்தும் விளக்கி, படங்களும் எடுத்து நாசாவுக்கு அனுப்பினார் ஐஸ்வர்யா.
தனக்கு அந்தக் கல் தொடர்பான விளக்கங்கள் தேவை என்று கோரி நாசாவுக்குக் கடிதம் எழுதினார்.
ஒரு கல்லை வைத்து, இந்தச் சின்ன வயதில் இத்தனை ஆர்வமா என்று வியந்த நாசா அதிகாரிகள், அந்தக் கல் குறித்த விளக்கத்தை ஐஸ்வர்யாவுக்கு பதிலாக அனுப்பியுள்ளனர்.
மேலும், ஐஸ்வர்யாவின் விஞ்ஞான ஆர்வத்தைப் பாராட்டி சான்றிதழையும் அனுப்பியுள்ளனர். இதுதவிர ஐஸ்வர்யாவின் பெயரில் தனி இணைய தளம் ஒன்றையும் நாசா ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications