ஜெயலலிதா மீதான வழக்கு விசாரணைக்கு தடை
சென்னை:
சோனியா குறித்து கடுமையாக விமர்சனம் செய்த முதல்வர் ஜெயலலிதா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரி திருச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சமீபத்திய மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டுக்காரர் என்று கூறி ஜெயலலிதா விமர்சித்தார்.
இந்தியக் குடியுரிமை பெற்றுவிட்ட சோனியா இந்தியர் தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் ஜெயலலிதா இவ்வாறு விமர்சித்தது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று கூறி திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஜெயலலிதா மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதையடுத்து திருச்சி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். அதில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நான் ஏதும பேசவில்லை. தேசப்பற்று மிக்க குடிமகள் என்ற முறையில் தான் சோனியா பிரதமராகக் கூடாது என்று பேசினேன்.
ஒரு முதல்வர் மீது உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முன்சீப் (திருச்சி) நீதிமன்றம் போன்ற கீழ் நிலை நீதிமன்றங்களிடம் அனுமதி பெறலாம் என்று அரசியல் சட்டத்தில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை.
இதனால் திருச்சி நீதிமன்றத்தில் நடக்கும் அந்த மனு மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பாலசுப்பிரமணியம், திருச்சி நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார்.












Click it and Unblock the Notifications