கங்குலியை மாற்ற வேண்டியதில்லை: டெண்டுல்கர்
பெங்களூர்:
கங்குலி சிறந்த கேப்டனாக செயல்படுகிறார்; அவரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார்.
பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் உடல் தகுதி பயிற்சி முகாமின்போது நிருபர்களிடம் டெண்டுல்கர் பேசுகையில்,
கேப்டன் பதவியில் கங்குலி சிறப்பாக செயல்படுகிறார். அவரது தலைமையின் கீழ் ஏராளமான வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம். அவரது தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி சரியான பாதையில் செல்கிறது. பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக ஆகாஷ் சோப்ரா சிறப்பாக விளையாடுகிறார். அதே நேரத்தில் யுவராஜ் சிங்கும் நல்ல ஆட்டக்காரர். அடுத்த போட்டியில் இருவரில் யாரைத் தொடக்க வீரராக களமிறக்குவது என்று முடிவெடுப்பது சிரமமாக காரியமாகும்.
இந்திய அணி வீரர்களுக்கு ஒப்பந்த ஊதிய முறை விரைவில் அமலாகும்.
ஆசியக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடுவோம். ஆனால் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். நான் எனது ஆட்ட முறையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. முதுகுவலி மீண்டும் வராமல் பார்த்து வருகிறேன் என்றார் சச்சின்.