நான் அடிக்கல் அய்யரல்ல.. ஆக்ஷன் அய்யர் !
மயிலாடுதுறை:
என்னை "அடிக்கல் அய்யர்" என்று கேலி செய்கின்றனர் சில எதிர்க்கட்சியினர். விரைவில் மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரிப் பாசனப் பகுதிகளில், எண்ணெய் நிறுவனங்களின் திட்டங்களை நிறைவேற்றி நான் ஒரு "ஆக்ஷன் அய்யர்" என்பதை நிரூபிப்பேன் என்கிறார் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யர்.
காவிரிப் படுகை பகுதிகளில் பெட்ரோலிய வளம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரை அந்த பெட்ரோலிய எண்ணெணையை வெளியில் எடுக்கும் பணியிலோ, அதை எடுக்கும் சாத்தியக்கூறுகளை ஆராயும் பணியிலோ மத்திய அரசு ஈடுபடவே இல்லை.
ஆனால், ஒவ்வொரு முறையும் தேர்தலில் நிற்கும்போதும் இப் பகுதியின் எண்ணெய் வளத்தை வைத்து காவிரி பாயும் மாவட்டங்களை துபாயாக மாற்றுவேன் என்று உறுதிமொழி மட்டும் தந்தவண்ணம் இருக்கிறார் அய்யர்.
மேலும் எம்.பியாக இருக்கும்போதெல்லாம் இது தொடர்பான திட்டங்களுக்கு மத்திய அரசு அதிகாரிகளைக் கொண்டு அடிக்கல் நாட்ட வைப்பார். ஆனால், அதற்குப் பின் ஏதும் நடப்பதில்லை.
இந் நிலையில் காவிரி பாசனப் பகுதியில் எண்ணெய் வளத் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்த கருத்தரங்கம் அய்யரின் தொகுதியான மயிலாடுதுறையில் நடந்தது.
மத்திய பெட்ரோலிய அமைச்சரான பின்னர் அய்யர் இப் பகுதியில் நடத்திய முதல் கருத்தரங்கம் இது. இதில் பல்வேறு எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களும், பெட்ரோலிய நிபுணர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அய்யர் பேசுகையில், கடந்த 13 வருடங்களில் மயிலாடுதுறை பகுதியில் நான் 27 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி விட்டேன். இதில் சில திட்டங்கள் நிறைவேறியுள்ளன. சில திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.
இதனால் என்னை அடிக்கல் அய்யர் என்று சில எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருகின்றன. எனவே இங்கு வந்துள்ள எண்ணெய் நிறுவனத் தலைவர்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம்: விரைவில் இந்தத் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுங்கள்.
அதன் மூலம் நான் அடிக்கல் அய்யர் அல்ல, ஆனால் ஆக்ஷன் அய்யர் என்பதை மக்களுக்கு நிரூபிக்க வாய்ப்பு கொடுங்கள் என்றார் அய்யர்.












Click it and Unblock the Notifications