ராஜ்யசபா: 6 தமிழக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
சென்னை:
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு தமிழகத்திலிருந்து போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த மலைச்சாமி, தினகரன், அன்பழகன், கோவிந்தராஜர் ஆகியோரும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சுதர்ஸன நாச்சியப்பன் மற்றும் பா.ம.கவைச் சேர்ந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் மலைச்சாமி முன்னாள் மக்களவை உறுப்பினராவார். தினகரன், அன்பழகன், கோவிந்தராஜர் ஆகியோர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள்.
சிவகங்கைத் தொகுதியில் இருந்து கடந்த முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதர்சன நாச்சியப்பனுக்கு இந்த முறை சீட் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் தொகுதி உடன்பாட்டின்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாமகவுக்கு வழங்குவதாக திமுக உறுதிமொழி கொடுத்திருந்தது. அதன்படி அன்புமணி மாநிலங்களவை உறுப்பினராகிவிட்டார்.
அதிமுகவைச் சேர்ந்த மைத்ரேயன், திமுகவைச் சேர்ந்த அக்னிராஜ், காதர், சங்ரலிங்கம், சிவசுப்ரமணியம், விடுதலை விரும்பி ஆகியோரின் பதவிக் காலம் வரும் 29ம் தேதியோடு முடிவடைகிறது. இதையடுத்து புதிய உறுப்பினர்கள் 6 பேரும் பதவியேற்பர்.
இதன் மூலம் மாநிலங்களவையில் அதிமுகவின் பலம் 15 ஆக உயர்ந்துள்ளது. திமுகவின் பலம் 6லிருந்து 4 ஆக குறைந்துள்ளது. தமிழக காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. முதன்முறையாக மாநிலங்களவையில் பாமக அடியெடுத்து வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications