குட்டிச் சாமியாரின் மான் தோல் பிரச்சனை
சேலம்:
| மான் தோல் மீது அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கியது தொடர்பாக சேலம் குட்டிச் சாமியார் பரணீதரன் மீது புதிய புகார் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக வனத் துறையினர் அவரது ஆசிரமத்தில் ரெய்ட் நடத்தி, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த பட்டாபி-சாவித்திரி தம்பதிகளின் மகனான பரணீதரன், தனது ஊரிலும் பின்னர் பெங்களூரில் உள்ள மடத்திலும் வேதம் படிக்க அனுப்பப்பட்டார். ஆனால், பெற்றோருக்கு அதிர்ச்சி தரும் விதத்தில், பரணீதரன் 9 வயதிலேயே திடீரென துறவறம் பூண்டார். |
|
இந் நிலையில் பரணீதரனை அவரது பெற்றோர் ஒரு நிகழ்ச்சியில் வைத்து கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து குட்டிச் சாமியாரை அவரது பெற்றோர் கடத்தி விட்டதாக ஆசிரம நிர்வாகிகள் புகார் தர, போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது தான் ஒரு துறவி, இனி வீட்டுக்குப் போக முடியாது என பரணீதரன் திட்டவட்டாய் சொல்லிவிட, அவரது காலில் விழுந்து ஆசி வாங்கிய போலீசார், பிரச்சனையை நீதிமன்றம் மூலமாகத் தீர்த்துக் கொள்ளுமாறு பரணீதரனின் பெற்றோரிடம் கூறிவிட்டனர்.
மேலும் குட்டிச் சாமியாருக்கும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது.
இந்தப் பிரச்சனை ஒரு வழியாய் தணிந்த நிலையில், இப்போது மான்தோல் ரூபத்தில் குட்டிச் சாமியாருக்கு புதிய பிரச்சனை எழுந்துள்ளது.
மான்தோலில் அமர்ந்து அவர் பக்தர்களை சந்தித்தார். இது குறித்து வனத் துறைக்கு புகார் பறந்தது. இதையடுத்து குட்டிச் சாமியார் தங்கியுள்ள கல்யாண மண்டபத்தில் வனத்துறை அதிகாரி ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு மான் தோல் ஏதும் சிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அயோத்தியாபட்டனம், நகரமலை ஆகிய இடங்களில் உள்ள ஆசிரம குடில்களில் வனத்துறையினர் சோதனையிட திட்டமிட்டுள்ளனர். மான் தோல் சிக்கினால் குட்டிச் சாமியார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரவீந்திரன் கூறியுள்ளார்.
மான்தோல் குறித்து குட்டிச் சாமியார் கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு ஒருவர் வந்து மான் தோல் கொடுத்தார். இதில் அமர்ந்து தியானம் செய்தால் ஆன்மீக சக்தி அதிகரிக்கும் என்றார்.
பின்னர் 3 நாட்கள் கழித்து அவர் மான் தோலை திரும்பப் பெற்றுச் சென்று விட்டார். அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை என்றார்.
இந் நிலையில் பக்தர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை குட்டிச் சாமியார் திடீரென ரத்து செய்துவிட்டார். அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்றும் தெரியவில்லை. வனத்துறையினர் ஏதாவது அதிரடி நடவடிக்கை எடுத்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் அவரை ஆசிரம நிர்வாகிகள் இடம் மாற்றிவிட்டதாகத் தெரிகிறது.
13 வயதில் துறவறம்.. பெற்றோர் கதறல்.. ஆள் வைத்து கடத்தல்













Click it and Unblock the Notifications