கபினி மூடப்படலாம்: மீண்டும் தமிழகத்துக்கு சிக்கல்
சேலம்:
கபினி அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளதால், அணை எந்நேரமும் மூடப்படும் என கர்நாடக நீர்ப்பாசனத் துறை அறிவித்துள்ளது.
கர்நாடகத்தின் 4 முக்கிய காவிரி அணைகளில் கபினி அணையில் நீர் மட்டம் சேமிக்க முடியாத அளவுக்கு உயர்ந்ததால், அங்கிருந்து மட்டும் உபரி நீர் தமிழகத்துக்குத் திறந்து விடப்பட்டுள்ளது. மற்ற 3 அணைகளிலும் நீரை கர்நாடகம் தேக்கி வைத்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 46.51 அடியாக உள்ளது. இந்த நீர் வரத்து இன்னும் 2 நாட்களுக்குத் தொடர்ந்தால், அணையின் நீர் இருப்பு 6 டிஎம்சியாக உயரும்.
ஆனால், கபினி அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக குறைந்து கொண்டு வருகிறது.
இந் நிலையில் கர்நாடக நீர்ப்பாசனத் துறை பொறியாளர் மல்லப்பா கூறுகையில், கபினிக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து அணை எந்நேரமும் மூடப்படலாம் என்றார்.
இதனால் தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் மத்தியில் கவலை நிலவுகிறது.
இதற்கிடையே, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைய ஆரம்பித்துள்ளது. இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 25,791 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இன்று பிற்பகல் 12 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 24,620 கன அடி நீர் மட்டுமே வந்துகொண்டுள்ளது.
நேற்றிரவு வினாடிக்கு 26,892 கன அடி நீர் மேட்டூர் வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையில் குறைந்தது 60 அடி தண்ணீர் இருந்தால்தான் அணையைத் திறப்பது குறித்து யோசிக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இதற்கிடையே, முதல்வர் ஜெயலலிதா, அதிகாரிகளுடன் மேட்டூர் நிலவரம் குறித்த ஆய்வு நடத்தினார்.
மேட்டூர் அணையில் நீர் நிலவரம், கபினி அணை நிலவரம், டெல்டா பாசனப் பகுதிகளுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை, அணையைத் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அதிகாரிகளுடன் ஜெயலலிதா விவாதித்தார்.
60 அடிக்கும் குறைவான நீர் இருந்தாலும், அதை விவசாயத்துக்காக திறந்துவிட்டுவிடலாம் என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்திருப்பதாகத் தெரிகிறது.
கபினி அணை தொடர்ந்து சில நாட்களுக்குத் திறந்திருந்தால் மட்டுமே 60 அடி நீர் இருப்பை மேட்டூர் அணை எட்ட முடியும்.












Click it and Unblock the Notifications