16,000 தாற்காலி ஊழியர்கள் திடீர் பணி நீக்கம்
சென்னை:
அரசு ஊழியர்கள் போராட்டத்தின்போது பணியில் சேர்க்கப்பட்ட 16,000 தாற்காலிக ஊழியர்களை தமிழக அரசு இரவோடு இரவாக கூண்டோடு பணி நீக்கம் செய்துள்ளது.
இதற்கான உத்தரவு தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் மூலமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அரசு ஊழியர் போராட்டம் நடந்தபோது படித்து, வேலையில்லா பட்டதாரிகள் ஆயிரக்கணக்கில் தாற்காலிகமாக அரசுப் பணியில் சேர்க்கப்பட்டனர். பலர் அதிமுக நிர்வாகிகளுக்கு பணமும் கொடுத்து இந்த வேலைகளை வாங்கினர்.
அவர்கள் ரூ. 4,000 ஊதியத்தில் பணியில் சேர்க்கப்பட்டனர்.
வேலையில் சேர்க்கப்பட்டபோதே, வேலை நிறுத்தம் செய்ய மாட்டோம், பணி நிரந்தரமாக்கக் கோர மாட்டோம், தினமும் பணிக்கு வருவோம், அரசு பதவி நீக்கம் செய்தால் நீதிமன்றத்தை அணுக மாட்டோம் என்பன உள்ளிட்ட உறுதிமொழிகளை எழுத்துப்பூர்வமாக அளித்த பிறகே பணியில் சேர்க்கப்பட்டனர்.
தலைமைச் செயலகத்தில் 1,000 பேரும், மாவட்ட தலைநகர்களில் உள்ள அரசு அலுவலகங்களில் தலா 500 பேருமாக சுமார் 16,000 பேர் பணியில் சேர்க்கப்பட்டனர்.
கடந்த ஜூலை மாதம் இவர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர். இன்னும் ஒரு மாதத்தில் அவர்கள் பணியில் சேர்ந்து ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இந் நிலையில் இந்த 16,000 பேரும் கூண்டோடு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அனைத்துத் துறை தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் அனுப்பியுள்ள உத்தரவில், தற்காலிக ஊழியர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவிக்குமாறும், அது தொடர்பான ரிப்போர்ட்டை அரசிடம் உடனே தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
வேலை நிறுத்தம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களில் பெரும்பாலனவர்களை நீதிமன்ற உத்தரவு காரணமாக மீண்டும் பணியில் சேர்த்தது அரசு. ஆனாலும் தாற்காலிக ஊழியர்களையும் தொடர்ந்து பணியில் வைத்திருந்தது.
இவர்களில் சுமார் 4,000 பேரை அரசே நடத்தும் டாஸ்மார்க் மதுக் கடைகளில் அரசு நியமித்தது.
சமீபத்திய மக்களவைத் தேர்தல் படுதோல்வியை அடுத்து அரசு ஊழியர்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. மேலும் பல அதிரடி சலுகைகளையும் அறித்து வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.
இந் நிலையில் இந்த ஊழியர்களால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு வருவதாலும், புதிய சலுகைகளுக்கே அரசிடம் போதிய நிதி இல்லாததாலும் இவர்களை கூண்டோடு பதவி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தாலும் கூட, நோட்டீஸ் கூட தராமல் திடீரென தங்களை அரசு நீக்கியுள்ளது தற்காலிக ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில், டாஸ்மார்க் கடைகளில் நியமிக்கப்பட்ட 4,000 தாற்காலிக ஊழியர்களின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications