தற்காலிக ஊழியர்களுக்கு கருணாநிதி ஆதரவு
சென்னை:
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, ஓடோடி வந்து உதவிக் கரம் நீட்டிய தற்காலிக ஊழியர்களுக்கு மீண்டும் அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, இந்த 16,000 பேரும் ஓடோடி வந்து அரசுக்கு உதவிக் கரம் நீட்டினார்கள்.
வேலை தேடி அலைந்த இந்த 16,000 பேரும், அறப்போரில் ஈடுபட்டிருந்த (வேலை நிறுத்தம்) அரசு ஊழியர்களுக்கு தங்களை அறியாமல் துரோகம் செய்கிறோம் என்று நினைக்காமல், அப்படியே நினைத்தாலும் தங்களது குடும்பத்துயர் முந்திக் கொண்டு வேலையை ஏற்றுக் கொள்ளத் தூண்டியதால் வேறு வழியின்றி வேலைகளில் சேர்ந்தார்கள்.
ஏமாறப் போகிறீர்கள் என்று எடுத்துச் சொன்னவர்களை ஒதுக்கிவிட்டு வேலையை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், 10 மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் அவர்களது மகிழ்ச்சி, குறைப் பிரசவமாகிவிட்ட காட்சியைக் காணுகிறோம்.
அரசுப் பணிக்கு ஆட்களைச் சேர்க்க சர்வீஸ் கமிஷன் மூலமாகத் தான் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்க வேண்டும். டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்தச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டால், தாற்காலிகப் பணியாளர்களின் நிலை என்னவாகும்? இதை நான் அப்போதே எழுதினேன். நான் எழுதியது அப்படியே நடந்துவிட்டது.
இன்று இந்த தாற்காலிக ஊழியர்கள் படும் வேதனை கண்டு அரசு ஊழியர்கள் நிச்சயமாக அக மகிழவில்லை. மாறாக, இவர்களை இப்படி ஏமாற்றி வீட்டுக்கு அனுப்புவது நியாயமில்லை என்றே ஊழியர் அமைப்புகள் நினைக்கின்றன.
தேவையேற்பட்டபோது குறைந்த ஊதியத்துக்காக ஓடோடி வந்து உதவிக் கரம் நீட்டிய இந்த ஊழியர்களின் கரங்களைத் துண்டித்துவிடாமல், நன்றியுணர்வோடு நடந்து அவர்களுக்கு வாழ்வளிக்குமாறு இந்த அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இனிமேலாவது, தொழிலாளர்களின் உரிமைகளைப் புரிந்து கொண்டு அவர்களது வாழ்க்கைக்கு குறுக்கே வர தொழிலாளர்களே நினைக்கக் கூடாது. தொழிலாளர்களின் உரிமையை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications