விஜயகாந்த் மன்றத்துக்கு தாவும் ரஜினி ரசிகர்கள்
தர்மபுரி - திருச்சி:
தமிழகம் முழுவதும் பல இடங்களில் ரஜினி ரசிகர்கள் அதிலிருந்து விலகி, விஜய்காந்தின் மன்றங்களுக்குத் தாவ ஆரம்பித்துள்ளனர்.
டாக்டர் ராமதாசுடனான மோதலில், விஜயகாந்த் நேரடியாகக் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அரசியல்வாதிகள் ஆகும் கனவில் இருக்கும் ரஜினி ரசிகர்கள் விஜய்காந்த் மன்றங்களில் இணைந்து வருகின்றனர்.
தர்மபுரி அருகே உள்ள செட்டிப்பட்டியைச் சேர்ந்த அண்ணாமலை ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவர் மாணிக்கம், மற்றும் நிர்வாகிகள் அதிலிருந்து விலகி விஜய்காந்த் மன்றத்தில் சேர்ந்துள்ளனர்.
அதே போல திருச்சி மாவட்டத்திலும் பல ரஜினி ரசிகர் மன்றங்கள் கலகலத்துள்ளன. அதன் நிர்வாகிகள் விலகி விஜய்காந்த் மன்றங்களில் சேர்ந்து வருகின்றனர்.
இதை விஜய்காந்தும் ஊக்குவிப்பதாகத் தெரிகிறது. கூட்டமாக விலகாமல், ஒவ்வொருவராக விலகி, தனித்தனியே தனது மன்றத்தில் இணையுமாறு விஜய்காந்த் ஆலோசனை கூறியிருப்பதாகத் தெரிகிறது.
தங்களது மன்றங்களில் பல ரஜினி ரசிகர்கள் சேர ஆரம்பித்துள்ளது உண்மை தான் திருச்சி மாவட்ட விஜய்காந்த் ரசிகர் மன்றத் தலைவர் தங்கமணியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது விஷயமாக ரஜினி ரசிகர்கள் சத்யநாராயண ராவிடம் பேசியதாவும், அவர் வழக்கம்போல் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் சொல்கிறார்கள்.
இந்தத் தாவலுக்கு அச்சாரம் போட்ட தர்மபுரி ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் மாணிக்கம் நக்கீரனுக்கு அளித்துள்ள பேட்டியில்,
ரஜினி அரசியலுக்கு வருவார் என லட்சக்கணக்கான ரசிகர்கள் நம்பினோம். ஆனால், அவர் எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை. தேர்தலுக்கு ஒரு கட்சியை ஆதரிக்கிறார். பல பிரச்சனைகள் வந்தபோதும் அரசியல் களத்தில் ரஜினி நேரடியாக இறங்க மறுக்கிறார்.
ஆனால், விஜய்காந்த் எதிர்ப்புகளை நேரடியாக எதிர் கொள்கிறார். அரசியல்வாதிகளுடன் நேரடியாகவே, பகிரங்கமாக தைரியமாக மோதுகிறார். எல்லாவற்றுக்கும் மேலே, விஜய்காந்த் தமிழ்நாட்டுக்காரர். அவர் தமிழனுக்காக உழைப்பார் என்று நம்பியே அவருடன் இணைகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications