சிறந்த ஆசிரியர்களுக்கு இடமாற்றத்தில் முன்னுரிமை
சென்னை:
மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாக வைத்து பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடத்துக்கு டிரான்ஸ்பர் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நல்ல முறையில் பாடம் நடத்தி, அதிக மாணவ, மாணவிகளைத் தேர்ச்சியடையச் செய்த ஆசியர்களுக்கு அவர்கள் கேட்ட இடத்துக்கு இடமாற்றம் கிடைக்கும். மோசமான தேர்ச்சி விகிதம் கொண்ட பள்ளி ஆசிரியர்களுக்கு தண்டனை தரும் வகையில் இடமாற்றம் இருக்கும்.
ஆசிரியர்கள் விரும்பும் இடத்துக்கு இடமாற்றம் பெற இரு ஆண்டுகளுக்கு முன் கவுன்சிலிங் முறையை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இதன்மூலம் இடமாற்றம் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி, டிரான்ஸ்பர் தந்து வந்தனர்.
இதனால் தங்களது செல்வாக்கை வைத்து டிரான்பர்களை வாங்கித் தந்து, பணம் அடித்து வந்த ஆளும் கட்சியினரின் பிழைப்பில் மண் விழுந்தது.
இந் நிலையில் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்த கடும் நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்துள்ளது அரசு. அதன் ஒரு படியாக சிறந்த பள்ளிகள், எந்த ஆசிரியரின் பாடத்தில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி அடைகிறார்கள் என்பதை வைத்து இனி இடமாற்றம் தரப்படவுள்ளது.
மேலும் பெரும்பாலான ஆசிரியர்கள் நகர்ப் பகுதிகளுக்கு இடமாறுதல் வாங்கிச் செல்வதைத் தவிர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையிலும், கிராமப் பள்ளிகளில் ஆசிரியர்கள் போதிய அளவில் இருக்கச் செய்யும் வகையிலும் கவுனசிலிங் முறையில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.
புதிய திட்டத்தின்படி ஒரு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாறுதல் கேட்டால், அவர்களது பாடத்தில் மாணவ, மாணவிகள் எந்த அளவுக்குத் தேர்ச்சியடைந்துள்ளனர் என்பதைப் பார்த்து சிறந்த ஆசிரியருக்கு இடமாற்றத்தில் முன்னுரிமை தரப்படவுள்ளது.
5ம் வகுப்பு வரை தேர்வுகள் உண்டு:
இதற்கிடையே, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை அனைத்து மாணவ, மாணவியரும் பாஸ் செய்யப்படுவார்கள் என்றாலும், ஐந்தாம் வகுப்பு வரை தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்களை ஆல் பாஸ் செய்ய வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருந்தாலும், கல்வித் தரம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஐந்தாம் வகுப்பு வரை வழக்கமான தேர்வு முறையைத் தொடர அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி வழக்கம்போலவே, காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு ஆகிய தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும். நன்றாகப் படிக்காத மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை பள்ளி ஆசிரியர்கள் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது அரசு.
அதே போல ஆசிரியர்களின் போதனை முறைகளையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிறப்புப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications