சென்னையில் வைகோ: பாஸ்போர்ட் ஒப்படைப்பு
சென்னை:
மத்திய அமைச்சரவையில் சேருவதற்கான வாய்ப்பே இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து இன்று அதிகாலை தனது மனைவியுடன் சென்னை திரும்பினார் வைகோ. அவருக்கு மதிமுக தொண்டர்கள் விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், கடந்த முறை அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தபோது இங்கே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர், என்னைக் கைது செய்ய. இப்போதும் குவிந்திருக்கிறார்கள், ஆனால் எனக்கு பாதுகாப்பு அளிக்க.
மத்திய அமைச்சரவையில் மதிமுக சேரும் வாய்ப்பு இருப்பதாக எங்கள் கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன் கூறியிருப்பதாக ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
கணேசன் அப்படிப் பேசியிருக்க மாட்டார். அவர் என்ன பேசினார் என்பதை கேட்காமல் அதுகுறித்துக் கருத்துக் கூற முடியாது. ஆனால், அமைச்சரவையில் சேருவதில்லை என்பது கட்சியின் ஒருமித்த முடிவு. அதில் மாற்றமே இல்லை, நிச்சயம் அமைச்சரவையில் சேர மாட்டோம்.
கர்நாடகத்திலிருந்து காவிரியில் தண்ணீர் விடப்பட்டது மகிழ்ச்சி தருகிறது. இது கருணாநிதி தலைமையிலான கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி. அதே போல காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பையும் கர்நாடகம் அமலாக்க வேண்டும்.
தாற்காலிக அரசு ஊழியர்கள் 16,000 பேர் இரவோடு இரவாக நீக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. பொடா விரைவில் வாபசாகும். மத்திய அரசு அதற்கான வேலைகளைச் செய்து வருவதால், அது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை என்றார் வைகோ.
பொடா சட்டத்தின் கீழ் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுதலையான பிறகு வைகோ மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை மதிமுகவின் உயர் மட்டக் குழுக் கூட்டம் வைகோ தலைமையில் நடந்தது. நடக்கிறது. இதில் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், ஜூலை 17ம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் மத்திய அமைச்சரவையில் சேர வேண்டும் என்று மூத்த தலைவர்கள் பேசி வருவது குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
பாஸ்போர்ட் ஒப்படைப்பு:
இந் நிலையில் தனது பாஸ்போர்ட்டை வைகோ இன்று பொடா நீதிமன்றத்தில் சமர்பித்தார்.
பொடா சட்டத்தில் கைதாகி ஜாமீனில் இருக்கும் அவர், உயர் நீதிமன்ற அனுமதியுடன் தான் அமெரிக்கா சென்றார். இன்று காலை திரும்பி வந்த அவர், தனது வழக்கறிஞர் மூலம் பொடா நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரனிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்.
எம்.பியாக இருந்த வைகோவிடம் டிப்ளமாட்டிக் பாஸ்போர்ட் உள்ளது.












Click it and Unblock the Notifications