கேபிஎன் பஸ் - லாரி மோதல்: 6 பேர் பலி
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே இன்று காலை ஒரு லாரியுடன் ஆம்னி பஸ் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர். கே.பி.என். நிறுவனத்துக்குச் சொந்தமான ஆம்னி பஸ் 27 பயணிகளுடன் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டு கோட்டை, தென்னலூர் தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் பகுதிக்கு வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த மோதலில் லாரியின் டீஸல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது. அந்த தீ பஸ்சிலும் பரவி, ஒரே சமயத்தில் பஸ்சும் லாரியும் கொழுந்து விட்டு எரிந்தன.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.
1. சுங்குவார் சத்திரம் திருமங்கலத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 50), லாரி டிரைவர்.
2. பஸ் டிரைவர் (பெயர் தெரியவில்லை),
3. சென்னை மயிலாப்பூர், முண்டக்கன்னி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லலிதா (65). இவர் பஸ்சில் பிரயாணம் செய்தவர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பஸ்சின் மாற்று டிரைவர், லாரி கிளீனர், பயணிகள் உள்பட 25 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவ்வாறு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தனர்.
1. கார்த்திக் (லாரி கிளீனர்),
2. மணி (பஸ் கண்டக்டர்),
3. ஜோதிலிங்கம் (லாரி லோடுமேன்).
மேலும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தை நேரில் பார்த்த சத்யராஜ்:
இந்த விபத்தை நடிகர் சத்யராஜ் நேரில் பார்த்திருக்கிறார். இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் அழகேசன் படப்பிடிப்புக்காக நடிகை பிரேமா, டைரக்டர் ஆர்த்தி குமார், தயாரிப்பாளர் அவினாஷ், டான்ஸ் மாஸ்டர் ஜான்பாபு ஆகியோருடன் சத்யராஜ் சென்னையிலிருந்து காரில் சென்று கொண்டிருந்தார்.
விபத்துக்குள்ளான லாரியின் பின்னால் சத்யராஜின் கார் சென்றதால், இந்த விபத்தை சத்யராஜும் படக்குழுவினரும் நேரில் பார்த்து அதிர்ந்தனர். உடனடியாக விபத்து குறித்து போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications