இதெல்லாம் எங்களுக்கு ஜூஜூபி: ரசிகர்கள்
சென்னை:
பாமகவினரின் எதிர்ப்பு எங்களுக்கு சாதாரணம் என்று விஜயகாந்த் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்ற மாநில பொதுச் செயலாளர் ராமுவசந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
விஜயகாந்த் நாட்டு நடப்பைத்தான் சொன்னார். அது பொறுக்காமல் பாமகவினர் கலகம் செய்கிறார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் நடிகர்களை எதிர்த்து வீண்பகையை தேடிக்கொள்கிறார்.
விஜயகாந்த் அமைதியில் நாட்டம் உள்ளவர் என்பதால் எங்களையும் அமைதியாக இருக்கச் சொல்லி இருக்கிறார். பாமகவுக்கு வட மாவட்டங்களில்தான் செல்வாக்கு உள்ளது. ஆனால் விஜயகாந்துக்கு தமிழ்நாடே சொந்தம்.
விஜயகாந்த் படங்கள் ஓடும் தியேட்டர்களில் பாமகவினர் ரகளை செய்துள்ளனர். இது பற்றி போலீஸில் புகார் செய்துள்ளோம். ராமதாஸ் எங்களை சீண்டி விட்டார். இனி அவருடன் சமரசம் இல்லை. யாருக்காகவும் பயந்து நாட்டு நடப்பை பேசாமல் இருக்க மாட்டோம்
பாமகவினரின் எதிர்ப்பு எங்களுக்கு சாதாரணம். அதை நாங்கள் சந்திப்போம். ஒவ்வொரு மன்றத்திலும் 100 பேர் வீதம் எங்களுக்கு 35 ஆயிரம் மன்றங்கள் உள்ளன. நாங்கள் மாநிலம் முழுவதும் வலுவாகக் காலூன்றி இருக்கிறோம்.
விஜயகாந்த் கண் அசைவுக்காக காத்து இருக்கிறோம். எப்போது வேண்டுமானாலும் அரசியல் கட்சியாக நாங்கள் மாறலாம் என்று கூறினார்.
இதேபோல் மத்திய சென்னை மாவட்ட விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விஜயகாந்த் கருத்துக்கு பாமகவினர் பதில் விளக்கம் அளித்திருக்கலாம். அதைவிடுத்து மன்றப் பலகைகளை உடைப்பதும், கொடிக் கம்பத்தை வெட்டிசாய்ப்பதும், விஜயகாந்த் உருவபொம்மைகளை எரிப்பதும் கண்டனத்துக்குரியது.
விஜயகாந்த் எப்போதும் ஜாதி பார்த்து உதவி செய்ததில்லை. இதுவரை நடத்தி வைத்த திருமணங்களும் ஜாதி பார்த்து நடத்தப்படவில்லை. அப்படிப்பட்டவரை பாமகவினர் இழிவுபடுத்துகிறார்கள்.
இத்தகைய அராஜக போக்கை பாமகவினர் தொடர்ந்தால், விஜயகாந்த்தின் அனுமதி பெற்று பெரிய போராட்டம் நடத்துவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications