மயங்கி விழுந்த பெண் ஊழியர்கள்: எங்கும் கண்ணீர்
சென்னை:
திடீரென வேலை பறிபோனதை அறிந்த தாற்காலிக அரசு ஊழியர்களில் சில பெண்கள் மயங்கி விழுந்தனர். பலர் கதறி அழுதனர். ஆண் ஊழியர்களும் கண் கலங்கியபடி நின்றிருந்தனர்.
இதனால் சென்னை தலைமைச் செயலகம் உள்பட மாநிலத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களும் சோகத்தில் மூழ்கின.
நேற்று முன் தினம் இரவு போடப்பட்ட ஒரே உத்தரவில் 16,000 ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர். இவர்களில் பலர் இந்தச் செய்தியை அறிந்திருக்கவே இல்லை.
அலுவலகங்களுக்கு வந்த பின்னர் தான் பணி நீக்கம் செய்யப்பட்டதை உணர்ந்தனர். இதில் பெண்கள் கதறி அழுதனர். சில பெண்கள் மயங்கி விழுந்தனர்.
ஆண்கள் கண் கலங்கியபடி நின்றிருந்தனர்.
மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த இந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் 35 வயதைக் கடந்தவர்கள்.
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வைத்து பல்லாண்டுகளுக்குப் பின் வயது மூப்பு அடிப்படையில் தான் இவர்களுக்கு தாற்காலிக அரசு ஊழியர் வேலை கிடைத்தது.
எப்படியாவது முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து முறையிட்டுவிடலாம் என கோட்டையில் இந்த ஊழியர்கள் காலை முதல் காத்திருந்தனர். ஆனால், அவர்களை மாலை வரை ஜெயலலிதா சந்திக்கவில்லை.
இதையடுத்து தங்களது கோரிக்கைகளை கண்ணீருடன் எழுதி அதை முதல்வர் அலுவலகத்தில் கதறி அழுதபடி அதிகாரிகளிடம் தந்துவிட்டுச் சென்றனர் இந்த ஊழியர்கள்.
இவர்கள் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷை சந்திக்க முயன்றனர். ஆனால், அவரும் சந்திக்க மறுத்துவிட்டார்.
முதல்வரை சந்திப்பதற்காகக் காத்திருந்த இந்த ஊழியர்கள் பிற்பகலில் உணவுக்காகக் கூட கலைந்து செல்லவில்லை. கோட்டை மரத்தடிகளிலேயே அமர்ந்திருந்தனர்.
இதில் சில பெண்கள், எங்கள் பிள்ளைகளை இப்போது தான் நல்ல பள்ளிகளில் சேர்த்தோம், வளரும் வயதில் நன்றாக சாப்பிடும் நிலையில் இருக்கும் எங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் ஊதியம் பெரும் உதவியாக இருந்தது.
இப்போது இந்த ஊதியம் பறிபோனால் என்ன செய்வது என்றே தெரியவில்லை என வீட்டின் நிலைமையை வெளிப்படையாகவே சொல்லி அழுதது கண்களைக் கலங்கச் செய்தது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட இந்த ஊழியர்களுக்கு கடந்த வாரம் தான் அவர்களது அடையாள அட்டைகளை தமிழக அரசு புதுப்பித்துத் தந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications