ரூ. 500 கோடி பளிங்கு மாளிகை தேவையா?: பாமக
சென்னை:
சென்னைவாசிகளில் 4ல் ஒருவர் குடிசையில் வசிக்கும்போது ரூ. 500 கோடியில் தலைமைச் செயலகம் என்ற பெயரில் குளு, குளு பளிங்கு மாளிகை தேவையா என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை விவரம்:
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் பழைய முடிவுகளை எல்லாம் மாற்றிக் கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதா, புதிய தலைமைச் செயலகம் என்ற பளிங்கு மாளிகை கட்டும் திட்டத்தை மட்டும் புதுப்பித்திருக்கிறார்.
எத்தனையோ அத்தியாவசியப் பணிகளும், மக்கள் நலத் திட்டங்களும் பணமில்லாமல் நின்று போயிருக்கும் நிலையில் ரூ. 500 கோடியில் புதிய தலைமைச் செயலகம் தேவையா?
தமிழ்நாட்டிலேயே அதிக குடிசைகள் நிறைந்த நகரம் சென்னை தான். குடிசைகள் நகரம் என்றே கூட அழைக்கும் அளவுக்கு நிலைமை உள்ளது. 25.6 சதவீத சென்னைவாசிகள் குடிசைகளில் வசிக்கின்றனர். அதாவது நான்கு பேரில் ஒருவர் குடிசை வாசி.
இவர்களைப் பற்றிய கவலை துளியும் இல்லாமல் 20,000 லட்சம் சதுர அடியில் பளிங்கு மாளிகை கட்டப் போகிறார்கள். முதலில் 10 முதல் 12 லட்சம் சதுர அடியில் கட்டப் போவதாக அறிவிப்பு வெளியிட்டார்கள். ஆனால், புதிய டெண்டரில் 20,000 லட்சம் சதுர அடியில் கட்ட இருப்பதாக சொல்கிறார்கள். புதிதாக 10 லட்சம் சதுர அடிகள் கூடுதலாக குட்டி போட்டது எப்படி?
இதுவரை 3 முறை டெண்டர் விட்டுவிட்டார்கள். முதலிரண்டு முறை விடப்பட்ட டெண்டர்கள் என்னவாயின? விண்ணப்பித்தவர்களை ஏன் நிராகரித்தார்கள்?
இது ஒரு பக்கம் இருக்க ரூ. 500 கோடியில் குளு, குளு பளிங்கு மாளிகை தமிழகத்துக்கு இப்போது தேவையில்லை. அவசியமில்லாத, அவசரமில்லாத இந்தத் திட்டத்தை நீண்ட காலத்துக்கு கிடப்பில் போடுவதே நல்லது.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
இதற்கிடையே, உயர் நீதிமன்றத்திடம் தந்த உறுதிமொழியை மீறி தமிழக அரசு தலைமைச் செயலகம் கட்டுவதாக உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவும் சிலர் முயன்று வருதாகத் தெரிகிறது.
ரூ. 50 கோடிக்கு மேல் திட்ட மதிப்புள்ள கட்டடங்களைக் கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். அது பெறப்படவில்லை என்பது ஒரு புறமிருக்க, இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது,
இப்போதைக்கு தலைமைச் செயலகம் கட்டும் திட்டம் ஏதுமில்லை என நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எழுத்து மூலமாக இப்படி உறுதிமொழி தந்துவிட்டு இப்போது தலைமைச் செயலகம் கட்ட டெண்டர் விட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்லி உச்ச நீதிமன்றம் செல்ல வழக்கறிஞர்கள் சிலர் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications