இரண்டாவது நாளாக உயர் நீதிமன்றம் ஸ்தம்பிப்பு
சென்னை & மதுரை:
மதுரை உயர் நீதிமன்றக் கிளை தொடர்பாக சென்னை வழக்கறிஞர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் இன்று இரண்டாவது நாளை எட்டியது. அதே போல இவர்களுக்கு எதிராக மதுரை வழக்கறிஞர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
மதுரை கிளையைத் திறப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் அறிவிக்கையை வெளியிடும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளை திறப்பு தொடர்பாக தமிழகம் முழுவதிலும் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் பிரச்சினை உருவாகியுள்ளது. மதுரை கிளைக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதை எதிர்த்து மதுரை வழக்கறிஞர்களும் பல்வேறு போராட்டங்களை நிடத்தினர்.
இந் நிலையில் ஜூலை 24ம் தேதி மதுரை கிளை திறக்கப்படும் என மத்திய அரசு முறைப்படி அறிவித்தது.
இதையடுத்து மதுரை கிளைக்கு குறைந்த அளவிலான மாவட்டங்களையே ஒதுக்க வேண்டும் என்று சொல்லி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
ஆனால் தங்களது மாவட்டங்களை மதுரையுடன்தான் சேர்க்க வேண்டும் என்று கோரி திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், திருவாரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந் நிலையில், மதுரை வழக்கறிஞர்களும் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை கிளை திறப்பு தொடர்பான குடியரசுத் தலைவரின் அறிவிக்கை இன்னும் கிடைக்காததால், அதுகுறித்த நிலையை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரி அவர்கள் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில் இறங்கியுள்ளனர்.
மொத்தத்தில் நேற்று முதல் சென்னை முதல் மதுரை வரையிலான பல மாவட்ட நீதிமன்றங்களில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வழக்கறிஞர்கள் மாறி மாறி நடத்தும் போராட்டங்களால் வழக்குகளில் சம்பந்தப்பட்ட பொது மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். உயர் நீதிமன்றப் பணிகள் இரண்டாவது நாளாக ஸ்தம்பித்துப் போயுள்ளன.












Click it and Unblock the Notifications