இராக்கில் 18 தமிழர்களுக்கு அமெரிக்கா கொடுமை
சென்னை:
திருச்சியைச் சேர்ந்த 17 பேரும், சென்னையைச் சேர்ந்த ஒருவரும் இராக் நாட்டில் பலூஜா நகரில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இராக்கில் அமெரிக்கப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் நடந்து வரும் நகர்களில் முக்கியமானது பலூஜா. வெளிநாட்டினரைக் கடத்துவது, தலையை வெட்டிக் கொல்வது போன்ற சம்பவங்களால் அங்கிருந்து அன்னியர்கள் அனைவரும் வெளியேறி வருகின்றனர்.
இந் நிலையில் ஜோர்டானைச் சேர்ந்த தாவூத் அண்ட் பார்ட்னர்ஸ் என்ற உணவு நிறுவனத்தில் பணியாற்ற மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆட்களை வேலைக்குச் சேர்த்தது. ஜோர்டான் நாட்டில் தான் வேலை என்று கூறப்பட்டதால், அதை நம்பி இந்த 18 பேரும் பணம் கொடுத்து பணியில் சேர்ந்தனர்.
ஆனால், ஜோர்டானுக்குச் சென்ற இவர்களை இராக்குக்கு அந்த நிறுவனம் அழைத்துச் சென்றுள்ளது. பலூஜா நகரில் அமெரிக்க வீரர்களுக்கு உணவு சமைத்துத் தரும் பணியில் இவர்களை ஈடுபடுத்தியுள்ளது.
பணம் கட்டி வேலைக்கு வந்துவிட்டதால், வேறு வழியின்றி, தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு மத்தியில் இவர்கள் பணியாற்றி வந்தனர்.
ஆனால், தாக்குதல்கள் மிகவும் அதிகரிக்கவே உயிருக்குப் பயந்து இந்த 18 பேரும் தங்கள் வேலைகளில் இருந்து விலகினர். தங்களை ஊர் திரும்ப அனுமதிக்குமாறு கோரினர். ஆனால், இவர்களை அமெரிக்கப் படையினரும் ஜோர்டான் உணவு நிறுவனம் ஊர் திரும்ப அனுமதிக்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு இவர்கள் தகவல் அனுப்பினர். ஆனால், இவர்களை விடுவிக்க தூதரக அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை.
இதைத் தொடர்ந்து இந்த 18 பேரின் குடும்பத்தினரில் சிலர் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு பேக்ஸ் செய்தி அனுப்பியுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலகத்துக்கு இன்று நேரில் வந்து மனுவும் கொடுத்தனர்.
18 பேரையும் மீட்க உதவுமாறு குடும்பத்தினர் தங்களது மனுக்களில் கோரியுள்ளனர்.
வேலையை விட்டு விலகிய பின்னரும் அமெரிக்கப் படையினரின் பலூஜா நகர முகாமிலேயே இவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வேலை செய்யவும் நிர்பந்திக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
இப்போது அவர்களின் விசாக் காலமும் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications