கொழும்பு- தூத்துக்குடி கப்பல் கூடாது: பாஜக
சென்னை:
தூத்துக்குடி- கொழும்பு கப்பல் போக்குவரத்து தொடங்கினால், தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுருவிவிடுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கும் கருத்துக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது இந்தியாவின் உள்நாட்டுப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
இக் கருத்தை அகில இந்திய பாஜக செயலாளர் இல.கணேசன் ஆமோதித்துள்ளார். செய்தியாளர்களிடம் இன்றுஅவர் பேசுகையில்,
ஏராளமான இலங்கை மக்கள் தென் தமிழகத்தில் வியாபாரத் தொடர்பு வைத்துள்ளார்கள். விமானப்போக்குவரத்தை விட கப்பல் போக்குவரத்து அவர்களுக்கு வசதியாக இருக்கும்.
இருப்பினும் இந்தக் கப்பல் போக்குவரத்தைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் தமிழகத்துக்குள் ஊடுறுவும்வாய்ப்புள்ளதாக ஜெயலலிதா கூறியிருப்பதில் உண்மையிருக்கிறது. அத்தகைய ஊடுறுவல் நடைபெறாமல்இருப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த பின்பே, மத்திய அரசு கப்பல் போக்குவரத்தைத் தொடங்கவேண்டும்.
இந்துத்வா கொள்கையை பாஜக எப்போதும் கைவிடவில்லை. எங்களது அடிப்படைக் கொள்கைகளில் அதுவும்ஒன்று. அதை எப்படி நாங்கள் கைவிட முடியும்?
இந்துத்வா பற்றி பாஜகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலேயே குழப்பமான கருத்து நிலவி வருகிறது.இந்துத்வா என்பது மதவாதம் அல்ல, தேசியவாதம் என்பதை நாங்கள் அவர்களிடம் விளக்குவோம்.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி 9ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக திமுககூட்டணிக் கட்சியினர் தெரிவித்துள்ளனர். அதற்குப் பதிலாக காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு மத்தியஅரசிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் வற்புறுத்தினால் பாராட்டலாம்.
இராக்கில் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு எடுத்த முயற்சிவெற்றி பெற்றதாக சிலர் செய்தி பரப்பி வருகிறார்கள். திமுக தலைவர் கருணாநிதியும் இதுதொடர்பாக பிரதமர்மன்மோகன் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால் அவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்றுகூறினார்.