கர்நாடகத்தின் சதி: கருணாநிதி, ராமதாஸ் தாக்கு
சென்னை:
காவிரி நடுவர் மன்றத்தை கலைக்க வேண்டும் அல்லது அதை மாற்றி அமைக்க வேண்டும் என கர்நாடகத்தின்கோரிக்கைக்கு தமிழக எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நடுவர் மன்றத்தை அமைக்க கடுமையாக போராடிய திமுக, கர்நாடகத்தின் போக்கு குறித்து அதிருப்தியும்,அதிர்ச்சியும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட்டு கர்நாடகஅரசுக்குக் கடிவாளம் போட வேண்டும் என அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை தாமதப்படுத்தும்நோக்கத்தில்தான் கர்நாடகம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு கடந்த காலங்களில், இரு மாநில விவசாயிகள் நலனைமுன்னிட்டு எடுக்கப்பட்ட நல்ல முடிவுகளைப் போல இப்போதும் எடுக்கப்பட உதவ வேண்டும்.
கர்நாடகத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதது. நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பையே அமல்படுத்தாதகர்நாடக அரசு இப்போது நடுவர் மன்றத்தையே கலைக்கக் கோருவது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள், மத்திய அமைச்சர்கள், வருகிற 7ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கவுள்ளனர் என்று கூறியுள்ளார்.
ராமதாஸ் எதிர்ப்பு:
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக அரசின் சதியை சட்ட ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் முறியடிக்க வேண்டும். கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடரவேண்டும்.
தமிழக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு நடந்து கொண்டு கர்நாடகத்தைக் கண்டிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு ஆதரவாக கருத்துக் கூற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அநியாயமான செயல்: நல்லகண்ணு
இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
13 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கவுள்ள நிலையில்அதைக் கலைக்கக் கோருவது அநியாயமானது. இறுதித் தீர்ப்பு இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டுதொடக்கத்திலோ வரவுள்ளது.
மத்திய அரசு உடனடியாக இப் பிரச்சினையில் தலையிட்டு காவிரி நடுவர் மன்றத்தின் செயல்பாட்டுக்கு குந்தகம்வராமலும், இறுதித் தீர்ப்பு சுமூகமான முறையில் வெளிவரவும் உதவ வேண்டும் என்றார்.