திருட்டு விசிடி: நடிகர்கள் ஊர்வலம் ஒத்திவைப்பு
சென்னை:
திருட்டு விசிடிக்கு எதிராக சென்னையில் நடிகர், -நடிகைகள் நடத்த இருந்த ஊர்வலம் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
திருட்டு விசிடியினை அடியோடு அழிக்கும் வகையில் திருட்டு விசிடி தயாரிப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்யக் கோரி தமிழ்த் திரையுலகினர் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் உண்ணாவிரதம்மேற்கொள்ளப்பட்டது.
அதையடுத்து திருட்டு விசிடியினை அடியோடு அழிக்க முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு அளிக்கும்வகையில் செப்டம்பர் 16-ம் தேதி (நாளை) நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த ஊர்வலத்தை சிறப்பாகநடத்த வேண்டும் என்றால் கால அவகாசம் போதாது என்றும், வெளியூர் படப்பிடிப்புகளில் இருப்பவர்கள் கலந்துகொள்ள வசதியாக தேதியை மாற்ற வேண்டும் என்றும் திரை உலகின் பல அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து திரை உலகினரின் பேரணியினை 23ம் தேதிக்கு தள்ளி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.எனவே நாளை அனைத்து திட்டமிட்டபடி படப்பிடிப்புகளும் நடைபெறும். தியேட்டர்களில் படக்காட்சிகளும்நடைபெறும்.
23ம் தேதி மன்றோ சிலையிலிருந்து தொடங்கும் திரை உலகின் பேரணியில் 10,000க்கும் மேற்பட்ட திரை உலகப்பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.