40 அரசு பஸ்கள் ஜப்தி: தர்மபுரி கோர்ட் உத்தரவு
தர்மபுரி:
நில ஆர்ஜிதத்துக்கு தகுந்த நஷ்டஈடு கொடுக்காததால் தர்மபுரி- சேலம், ஒசூர் வழி தடத்தில் ஓடும் 40 அரசு பஸ்களை தர்மபுரி சார்பு நீதிமன்றம் ஜப்தி செய்தது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கேட்டைச் சேர்ந்த ராஜம்மாள் மற்றும் பசவராஜுக்குச் சொந்தமான நிலம் பாலக்கோடு அருகே தர்மபுரி சாலையில் உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்டம் எண் 2-க்கு பணிமணை அமைப்பதற்காக இந்த நிலத்தை (நான்கரை ஏக்கர்) நிலத்தை தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன் ஆர்ஜிதம் செய்தது.
ஆனால் இந்த நிலத்திற்காக தமிழக அரசு வழங்கிய தொகை நிலமதிப்பைவிட குறைவாக இருப்பதாக நில உரிமையாளர்கள் தர்மபுரி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் கடந்த வருடம் செப்டம்பர் 17ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில், மனுதாரர்களுக்கு ரூ.4.5 கோடி நஷ்டஈடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
நீதிபதி தினகரன் மற்றும் நீதிபதி மாசிலாமணி ஆகியோர் இந்த மனு மீதான விசாரணையை நடத்தினர். இதற்கிடையே தமிழக அரசு மற்றும் மனுதாரர்கள் இடையே சமரசம் பேசப்பட்டது. ரூ.1.5 கோடியை தமிழக அரசு ராஜம்மாள் மற்றும் பசவராஜூக்கு வழங்க ஒத்துக்கொண்டது. இதனை உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.
இந்தத் தொகையை கடந்த ஜூன 12ம் தேதிக்குள் வழங்கிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்தக் காலக்கெடு முடிந்து 3 மாதங்களை கடந்தும் மனுதாரர்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகையை அரசு வழங்கவில்லை.
இதையடுத்து ராஜம்மாள் மற்றும் பசவராஜ் தரப்பில் தர்மபுரி சார்பு நீதிமன்றத்தில் எக்சிகியூசன் பெட்டிசன் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஜஸ்டின் ஜார்ஜ், தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்டம் எண் 2-க்கு சொந்தமான தர்மபுரி- ஒசூர், தர்மபுரி- -சேலம் வழித்தடத்தில் செல்லும் 40 பேருந்துகளை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications